சிட்னி: பாலியல் வன்முறை விவகாரத்தில் பிடிபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணைத் தொகை 150,000 ஆஸ்திரேலிய டாலர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், சமூக ஊடகங்கள், 'டிண்டர்' ஆகியவற்றைப் பயன்படுத்த அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குணதிலக 11 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் ஆண்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இம்மாதம் ஆறாம் தேதியன்று சிட்னி நகரில் உள்ள ஹயட் ரீஜன்சி ஹோட்டலில் 31 வயது குணதிலக கைதுசெய்யப்பட்டார். அனுமதியின்றி பாலியல் உறவு வைத்துக்கொண்டதன் தொடர்பில் அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குற்றச்சாட்டுகளுக்கான நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை. குணதிலக குற்ற ஒப்புதலோ குற்ற மறுப்போ இதுவரை தெரிவிக்கவில்லை.
சென்ற மாதம் 29ஆம் ேததியன்று குணதிலகவும் சம்பந்தப்பட்ட பெண்ணும் 'டேட்டிங்' எனும் துணை தேடும் செயலியின் மூலம் சந்தித்ததாகவும் இம்மாதம் இரண்டாம் தேதியன்று இருவரும் சந்திக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிட்னி நகரின் மத்திய வர்ததகப் பகுதியின் பல இடங்களில் இருவரும் பலமுறை மதுபானம் அருந்தியதாகக் காவல்துறை கூறியது. அதற்குப் பிறகு அவர்கள் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. பெண்ணின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் குணதிலக நடந்துகொண்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.