பொன்மணி உதயகுமார்
சிங்கப்பூர் தமிழர் வரலாற்று ஆர்வலர் சுப்பையா லெட்ச்சுமணன் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.
அவர்தம் பெற்றோர், மனைவி, மகள், மகன், குடும்பத்தினர் ஆகியோரை விட்டுச் சென்றுள்ளார்.
சிங்கப்பூர் இந்திய மரபுடைமை, இங்குள்ள தமிழர் வரலாறு, செட்டியார் சமூகம் ஆகியவற்றில் ஆர்வம் அதிகமுள்ள திரு லெட்ச்சுமணன், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் வரவாற்றைப் பதிவு செய்து எடுத்துரைப்பதில் அளப்பரிய பங்காற்றியவர்.
“ஒரு நூற்றாண்டுக்கு மேலாக சிங்கப்பூரில் வசித்துவரும் அவரது குடும்பம் பாதுகாத்து வந்த பழமையான பொக்கிஷங்கள் பலவற்றை அருங்காட்சியகங்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.
அருங்காட்சியகங்களின் தொண்டூழியர்களுக்கு சிங்கப்பூர் இந்தியரின் வரலாற்றுடன் செட்டியார் சமூகத்தின் வரலாறு குறித்த தகவல்களையும் அவர் கற்றுத் தந்துள்ளார்,” என்று அந்தாதி எனும் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரும், ஆய்வாளருமான நளினா கோபால் கூறினார்.
திரு லெட்ச்சுமணன், சிங்கப்பூர் மரபுடைமை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என்றும் அவர் ஓர் அரிய மனிதர் என்றும் திருவாட்டி நளினா வருணித்தார்.
“நிதித்துறை நிபுணராகிய திரு லெட்ச்சுமணன் ஒரு சீரிய வரலாற்றாளராகவும் தொண்டாற்றி வந்தார். தொடக்க கால இந்தியச் சமூகத்தைப் பற்றி, குறிப்பாகச் செட்டியார் சமூகம் பற்றி சுவையான பல தகவல்களை அவர் அளித்துள்ளார். அக்காலகட்டத்தில் தமிழ்த் தலைவர்களைப் பற்றியும் பதிவுசெய்துள்ளார்,” என்றார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் அருண் மகிழ்நன். திரு லெட்ச்சுமணன், அவ்வமைப்பில் செயல்பட்டு வந்தார்.
திரு லெட்ச்சுமணனின் மறைவு இந்திய சமூகத்திற்குப் பேரிழப்பு என்றும் திரு அருண் குறிப்பிட்டார்.
“1970களில் மறைந்துபோன கிட்டங்கிகளைச் சுற்றிய செட்டியார் சமூகத்தின் வாழ்வியலைத் துல்லியமாக அவர் ஆய்வு செய்தார்,” என்று சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் ஆசிரியர் முகம்மது காசிம் ஷாநவாஸ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இன்று பிற்பகல் 4.45 மணிக்கு 33 மூன்பீம் வாக் சிங்கப்பூர் 277243 எனும் முகவரியிலிருந்து புறப்படும் திரு சுப்பையா லெட்ச்சுமணனின் நல்லுடல் மாண்டாய் தகனச்சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மண்டபம் 4ல் மாலை 5.45 மணியளவில் தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.