மோனலிசா
ஈராண்டுகளாக பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளுடன் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றுவந்த நிலையில், இவ்வாண்டு கட்டுப்பாடுகள் அகன்றதை அடுத்து, 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கேலாங் ஈஸ்ட் வட்டாரத்திலுள்ள ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து காணிக்கை செலுத்தினர்.
நேற்று இரவு 7 மணியளவில் முதல்கால பூஜை தொடங்கிய வழிபாடுகள் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திருக்கல்யாண பெருவிழாவுடன் நிறைவுபெறும். முன்னதாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் ரதப் புறப்பாடும் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பிரதோஷ வழி பாடும் நடைபெற்றன.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகையளித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பால்குடம் செலுத்தினார்.
பல இன, பல சமய நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் விதமாக பிற இனத்தவர் பலரும் இவ்வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
அவ்வகையில் தமது மொத்த குடும்ப உறுப்பினர்கள் 14 பேருடன் பால்குடங்கள் ஏந்தி வழிபாட்டில் கலந்துகொண்டார் சீனரான 58 வயது லாரன்ஸ் டான்.
பத்து ஆண்டுகளுக்கும் மேல் இவ்வழிபாட்டில் தவறாமல் கலந்துகொள்வதாகவும் சிவனைத் தரிசிக்க தொடங்கியபின் தங்கள் குடும்பத்தின் நல்வாழ்வு மேலோங்கியுள்ளதைக் என்று தாம் நம்புவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் ஓட்டுநரான திரு டான்.
“கோயிலின் குடமுழுக்கு ஈராண்டுகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோயிலின் மறுசீரமைப்புப் பணிகளின் முதற்கட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பக்தர்களின் வழிபாட்டில் எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,” என்று ஸ்ரீ சிவன் கோயிலின் தலைவர் யோகநாதன் அம்மையப்பன் கூறினார்.
“சனி மகா பிரதோஷமும் மகா சிவராத்திரியும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் அமைந்தது இவ்வாண்டு வழிபாட்டின் கூடுதல் சிறப்பம்சம். மேலும் ஈராண்டுகளுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற வழிபாட்டில் பலர் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்,” என்று கோயில் துணைத் தலைவர் சுசிலா கணேசன் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் 170,000 ருத்ராட்ச மணிகளால் ஆன சிவலிங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாண்டு மறுசுழற்சி முறையில் அந்த மணிகள் அலங்கார அணிகலன்களாக மாற்றப்பட்டு பக்தர்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
“அணிகலன்களின் விற்பனையிலிருந்து ஈட்டப்படும் தொகை கோயிலின் குடமுழுக்கு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும். முழுக்க முழுக்க தொண்டூழியர்களால் செய்யப்பட்ட இந்தமுயற்சியில் பங்குகொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்று ஸ்ரீ சிவன் கோயிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டூழியம் செய்துவரும் 35 வயது ஆண் தாதி அருள்குமார் உலகநாதன் கூறினார்.
1980களில் ஸ்ரீ சிவன் கோயிலின் முதல் குடமுழுக்கில் தொண்டூழியராகச் சேவையாற்றிய ராஜமோகன் பழனியப்பன், ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் மகா சிவராத்திரி வழிபாட்டில் கலந்துகொள்வது வழக்கம்.
முதன்மை தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரியும் 67 வயது திரு ராஜமோகன், “இக்கோயில் என் மனதிற்கு நெருக்கமானது. கொவிட்-19 சூழல் முடிந்து நல்ல முறையில் மீண்டுவர அருள்புரிந்த இறைவனுக்கு நன்றிகூற வந்தேன்,” என்று கூறினார்.
இதேபோல சிங்கப்பூரிலுள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை கண்விழித்து வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.