சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவை வழக்கமாக ஈராண்டுகளுக்கு ஒருமுறை படைக்கும் ‘சங்கே முழங்கு’ என்ற மேடை நாடகம், 2019ற்கு பிறகு மீண்டும் இவ்வாண்டு மேடையேறவிருக்கிறது.
கொவிட்-19 நோய்ப்பரவலின் காரணமாக 2021 ஆண்டு இந்த நாடகம் நடைபெறவில்லை.
“மின்னிலக்க வழியிலான பொழுதுபோக்குத் தளங்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில், மேடை நாடகக் கலையைத் தொடர்வதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்.” என்று ‘சங்கே முழங்கு 2023’இன் தயாரிப்பாளர் கே வி சம்யுக்தா கூறினார்.
இவ்வாண்டின் கதைக்களம் ஒரு பழங்காலத்தையொட்டி அமைந்துள்ளது. கதை ஓர் அரசரின் வாழ்க்கை விழுமியங்களை மையமாகக் கொண்ட இந்நாடகத்தில் நகைச்சுவை, நடனம், சண்டைக்காட்சிகள் என்ற அம்சங்களோடு மேடை நாடகங்களுக்கென்றே உரித்தான தொழில்நுட்ப அம்சங்களும் அமைந்திருக்கும் என்று நாடகத்தின் இயக்குநர் சுப்பிரமணியன் கார்த்திகேயன் கூறினார்.
“நாடகத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார் நாடகத்தின் தயாரிப்பு மேலாளர் காவ்யா பிரபாகரன்.
1987ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘சங்கே முழங்கு’, சிங்கப்பூரிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைத்து, நடிப்பு, நடனம், இசை, இயக்கம், மேடை அலங்காரம், ஒப்பனை, தொழில்நுட்ப வேலைகள் ஆகிய பல மேடை நாடகத் திறன்களை வளர்க்க உதவி வந்துள்ளது.
இன்று சிங்கப்பூர் தமிழ் ஊடகத்துறையிலும் மேடை நாடகத் துறையிலும் பணிபுரிந்து வரும் பலருக்குத் தங்கள் ஆர்வத்தையும் திறன்களையும் வெளிக்கொணர ‘சங்கே முழங்கு’ ஒரு தளமாக இருந்துள்ளது.
‘சங்கே முழங்கு’ ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் இரவு 7 மணி முதல் 10 மணிவரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் நடைபெறும்.