உலகில் அனைவரும் அரைச் செங்கற்களே என்று கூறும் தி ஹாஃப் பிரிக் நிறுவனம், நாம் முழுச் செங்கற்களாக நம்மை எண்ணும்போதே நம் வளர்ச்சி நின்றுவிடுவதாகச் சொல்கிறது.
தி ஹாஃப் பிரிக் நிறுவனம், ‘ரா ஸ்டோரீஸ்’ (‘Raw Stories’) நிகழ்ச்சியை சென்ற ஞாயிறு ஆகஸ்ட் 27, சிங்கப்பூரில் முதன்முறையாக, ஒன் ஃபேரர் விடுதியில் நடத்தியது. இதற்கு சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபை துணைபுரிந்தது.
கனடா, உக்ரேன், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பேச்சாளர்களும் பார்வையாளர்களும் கலந்துகொண்டனர்.
இதற்குமுன்பு 6 ‘ரா ஸ்டோரீஸ்’ நிகழ்ச்சிகள் இந்தியாவின் 4 மாநிலங்களில் மொத்தம் 180க்கும் மேற்பட்ட பேச்சாளர்களுடன் நடந்துள்ளன. பேச்சாளர்கள் 5 வயதுச் சிறுவர்கள் முதல் வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவத் தொழிலதிபர்கள், 90 வயதை நெருங்கும் 1 ரூபாய் இட்லிப் பாட்டி வரை பல்வேறு பின்னணிகளைச் சார்ந்தோராக இருந்துள்ளனர்.
சவால்களை எதிர்கொண்டு மீண்டுவந்தோர் தம் உண்மைக் கதைகளை மக்களுடன் பகிர்ந்துகொள்வதன்மூலம் பிறரது வாழ்வை நல்லவிதமாக மாற்றியமைக்க ‘ரா ஸ்டோரீஸ்’ நிகழ்ச்சி வாய்ப்பளிக்கிறது.
“தங்கப் பதக்கத்தை வென்றவரை உலகம் கொண்டாடுகிறது; ஆனால் ஆயிரக்கணக்கான வெற்றியாளர்களை உருவாக்கிய ஆசிரியரை மறக்கிறது.
“கொத்தனார் எவ்வாறு அரைச் செங்கற்களை ஒதுக்குகிறாரோ, அதைப்போல சமூகம், அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியோரை நிராகரிக்கிறது. ஆனால் அரைச் செங்கற்கள் நாற்புறங்களிலும் இல்லாமல் கட்டடத்தைக் கட்ட முடியுமா?
“உலகை முழுமைப்படுத்துவதில் அனைவரது பங்கும் உள்ளது. அந்தப் பங்கை மக்களுக்கு உணர்த்த நாங்கள் மேடை அளிக்கிறோம்,” என்றார் தி ஹாஃப் பிரிக் நிறுவனர் திரு பாலசுப்பிரமணியன் ஜெயம்.
இந்நிகழ்ச்சியில் தி ஹாஃப் பிரிக் நிறுவனத்திற்கும் சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. “இதன்மூலம் சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும்,” என்றார் தொழிற்சபையின் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு.
அடுத்த ‘ரா ஸ்டோரீஸ்’ நிகழ்ச்சி அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் துபாயில் நடைபெறவுள்ளது. பேச்சாளர்களை முன்மொழிய https://thehalfbrick.com/ இணையப்பக்கத்தை நாடலாம்.
நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் சிங்கப்பூரில் மேலும் நிகழ்ச்சிகள் நடத்தவிருப்பதாகக் கூறினர் தி ஹாஃப் பிரிக் குழுவினர்.