தீபாவளிக்காகத் தன் ஊழியர்களுக்கு புத்தாடைகள், பலகாரங்களை வழங்கி, ஆரவாரமாகக் கொண்டாடியது ஹன்சிகா இன்ஜினியரிங் நிறுவனம்.
பூஜைகள் முடிந்த பிறகு அனைவரும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ந்தனர்.
“சிங்கப்பூரில் பணிபுரியும் பல ஊழியர்களுக்கும் தங்கள் ஊரில் தங்கள் குடும்பங்களுடன் பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
“இதைத் தவிர்க்கவே எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார் நிறுவனத்தின் துணை இயக்குநர் திருமதி மாலதி ராஜபாண்டியன்.
2015ல் ஐந்து ஊழியர்களுடன் தொடங்கிய ‘ஹன்சிகா இன்ஜினியரிங்’ நிறுவனத்தில் இப்பொழுது 55க்கும் மேல் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
“இவ்வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அனைத்து ஊழியர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,” என்று கூறினார் இயக்குநர் திரு ராஜபாண்டியன்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இத்தீபாவளிக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துவந்துள்ளது ஹன்சிகா.
சென்ற ஆண்டு ஐந்து நபர்களுக்கு தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, எட்டாவது ஆண்டு நிறைவையொட்டி எட்டு நபர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளை நிறுவனம் வழங்கியது.
தொலைக்காட்சி, கைப்பேசி, மிக்ஸர், கிரைண்டர், எரிவாயு அடுப்பு, மின்சார அரிசி சூட்டடுப்பு போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
இத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் நீர் சூடேற்றிச் சாதனம் இலவசமாக வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்து உண்ட களிப்பில் அனைவரும் தீபாவளியைக் கோலாகலமாக வரவேற்றனர்.