தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் திரு யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘வேர்களைத்
தழுவும் விழுதுகள்’ நூல் வெளியீட்டின் மூலம், 10,000 வெள்ளி திரட்டப்பட்டு ஸ்ரீ நாராயண மிஷனுக்கு வழங்கப்பட்டது.
டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி மாலை நான்கு மணியளவில் ஈசூன் அவென்யூ ஐந்தில் இருக்கும் ஸ்ரீ நாராயணமிஷன் அறநிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் டாக்டர் ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஸ்ரீ நாராயண மிஷனின் துணைத் தலைவரான திருமதி சரளாராமன் வரவேற்புரை வழங்கியதைத் தொடர்ந்து, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் திரு அருமைச்சந்திரன், கழகத்தின் ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகளைப் பற்றியும் நூல் வெளியீட்டின் மூலமாக கிடைக்கும் நிதியை அறநிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பது பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
நூலாசிரியர் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் பேசும்போது, தலைவர்களின் சுயசரிதையைவிட
ஒரு சராசரி மனிதனின் சுயசரிதையே சாதாரண மனிதனுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என்றார். எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் சிங்கப்பூருக்கு வந்த தன்னை சிங்கப்பூர்தான் இந்த அளவுக்கு உயர்த்தியது என்று குறிப்பிட்ட அவர், தன்னை வளர்த்த நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற அடிப்படையில்தான் 2010 முதல் தன் நூல் வெளியீட்டில் கிடைக்கும் நிதியை அறநிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சி மூலமாகத் திரட்டப்பட்ட பத்தாயிரம் வெள்ளி நிதி அமைச்சர் முன்னிலையில் ஸ்ரீ
நாராயண மிஷனுக்கு வழங்கப்பட்டது.