சிங்கப்பூரில் ‘ஹைபிரிட்’ எனப்படும் அலுவலகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் கலந்து பணிபுரியும் முறை நிறுவனங்களில் மனிதவளப் பிரிவுகளின் பணிச்சுமையைக் கடினமாகி இருப்பதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இவ்வகை ‘ஹைபிரிட்’ பணிச்சூழல் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆசிய பசிபிக் மனிதவள மேம்பாட்டுக்கான தொழில்முறை அமைப்பான பட்டயப் பணியாளர், மேம்பாட்டுக் கழகம் நடத்திய ஆய்வறிக்கை, இவ்வகைப் பணிச்சூழல் ஊழியர்களின் மனநலம், நல்வாழ்வு உள்ளிட்டவற்றை கவனிப்பதில் தொடங்கி புதிய, திறமையான ஊழியர்களை ஈர்த்து அவர்களை வேலையில் தக்கவைப்பதைக் கடினமாக்கியிருப்பதாக கூறுகிறது.
ஆஸ்திரேலியா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வல்லுநர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, திறமை மேலாண்மை, பணியாளரின் முன்னுரிமை, ‘ஹைபிரிட்’ பணிச்சூழலின் நுணுக்கங்கள் குறித்த கண்ணோட்டங்களை வழங்குகிறது.
மின்னிலக்கத் தொழில்நுட்பத் தளங்களில் ஏற்படும் முன்னேற்றம், மாறுபட்ட புதிய பணிச்சூழல் அணுகுமுறைக்கு வித்திடுவதாக சிங்கப்பூரர்கள் நம்புவதாக இந்த ஆய்வில் தெரிய வருகிறது.
இந்த ஆய்வில் பங்கேற்ற தொழில்முறை வல்லுநர்கள், மாறிவரும் பணிச்சூழல், ஊழியர்களின் உடல், மனநலனில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏறத்தாழ 30 விழுக்காட்டினர் மட்டுமே இச்சூழல் உடல், மனநலனில் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறினர்.
எனவே, தலைமைத்துவப் பொறுப்பில் உள்ளவர்கள், இவற்றைக் கருத்தில்கொண்டு உரிய நடைமுறைகளை ஆராயவும் வேலை-வாழக்கை சமநிலையை எட்ட ஊழியர்களுக்கு உதவவும் இந்த ஆய்வு முடிவு வலியுறுத்துகிறது.
சிங்கப்பூரில் பணிச்சூழலைக் கருத்தில்கொண்டு நிறுவனங்களில் மனிதவளப் பிரிவின் சிரமங்களை ஆராய்ந்து அவற்றைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆய்வில் 39 விழுக்காட்டினர் கருதினர்.
பெரியளவில் தொழில்நுட்ப மாற்றம் ஏற்படும்போது நிறுவனங்கள் அனைத்தும் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுக்க வேண்டும் என்கிறது இந்த ஆய்வு.
மேலும், உற்பத்தித்திறன், நிதித்திறன், புதுமைகள் என அனைத்தையும் உள்வாங்கும் நேரத்தில், பணியாளர்களின் பணியிட அனுபவங்களை மேம்படுத்த ஆக்கபூர்வமான வழிகளைக் கண்டறிந்து செயல்பட வேண்டும் எனவும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.