அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நாம் நன்கு அறிந்த பழமொழியாகும். ஆனால் முகப் பொலிவுக்கு அகத்தில் உள்ள அழகு மட்டும் போதுமா என்ற கேள்வியும் நம்மிடையே எழாமலில்லை.
கடந்த பல பத்தாண்டுகளாக மக்களுக்கு சருமப் பராமரிப்பின் மீதுள்ள நாட்டம் அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வலம் வரும் சருமப் பராமரிப்புச் செயல்முறைகள் பெண்களிடையே பிரபலமாகி வருகின்றன. இவற்றின் நம்பகத்தன்மை குறித்து மருத்துவ நிபுணரும் தோல் மருத்துவருமான உமா அழகப்பனிடம் கேட்டறிந்தது தமிழ்முரசு.
என் முகத்தைக் கழுவ வெறும் தண்ணீரும் சவர்க்காரமும் போதும்
மெய்! பொதுவாக முகத்தைச் சுத்தம் செய்ய வெறும் தண்ணீரும் சவர்க்காரமும் போதுமானவை. எக்ஸிமா அல்லது முகப்பரு போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் முகத்தில் இருந்தால் சுத்தப்படுத்தும் சிறப்புப் பொருள்கள் தேவை.
இந்தியர்களுக்கு ‘சன்ஸ்கிரீன்’ தேவையில்லை
பொய்! சருமத்தின் நிறம் எதுவாக இருப்பினும் ‘சன்ஸ்கிரீன்’ பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் சூரிய ஒளி அனைத்துத் தோல் வகைகளிலும் நிறமிப் பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
முகத்தில் பயன்படுத்தும் ஒரு சருமப் பராமரிப்புப் பொருள் எரிச்சல் உண்டாக்கினால், அது பயனுள்ள பொருளாகும்
இது முற்றிலும் பொய் இல்லை. சில சருமப் பராமரிப்புப் பொருள்கள், சிவத்தல் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். ஆரம்பப் பயன்பாட்டிற்கு அதை ஏற்றுக்கொள்ளலாம். இல்லையெனில், அது பயன்படுத்த ஏற்றதோ பாதுகாப்பானதோ அன்று.
முகத்தில் அதிக ஒப்பனைப் பொருள் பயன்படுத்தினால் முகப்பருக்கள் கூடும்
மெய்! குறிப்பாக ‘காமெடோஜெனிக்’ முக ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்துவது முகப்பருவை ஏற்படுத்தும். முக ஒப்பனையைப் பின்னர் முழுவதுமாக அகற்றுவது மிகவும் முக்கியம்.
அதிக விலையுயர்ந்த சருமப் பராமரிப்பு, முக ஒப்பனைப் பொருள்கள் ஆகப் பயனுள்ளவை ஆகும்
பொய்! சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருள்கள் மலிவானவை. அவை பெரிதாக சந்தைப்படுத்தப்படுவதால் பொருள்கள் விலை உயர்ந்ததாகக் காணப்படுகின்றன.
எண்ணெய் வடியும் முகச் சருமம் உள்ளவர்கள் முகத்திற்கான ‘மாய்ஸ்ச்சரைசர்’ பயன்படுத்தத் தேவையில்லை
பொய்! எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்கள் முதலில் பொருத்தமான சவர்க்காரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதோடு, லேசான ‘மாய்ஸ்ச்சரைசர்’ பயன்படுத்த வேண்டும். சருமம் இளமையாகத் தோற்றமளிக்க இது பெரும் உதவியாக இருக்கும்.
இயற்கை சார்ந்த சருமப் பராமரிப்புப் பொருள்கள் செயற்கைப் பொருள்களைவிட நன்மை அளிக்கும்
‘இயற்கையாக’ தயாரிக்கப்படும் சில பொருள்களில் நிறைய தாவரச் சாறுகள் மற்றும் வாசனை திரவியங்கள் இருக்கலாம். அவை சருமத்திற்கு எரிச்சலூட்டும். மேலும் இதனால் சருமத்தில் ‘எக்ஸிமா’ எற்படும் வாய்ப்பு இருக்கிறது.
மென்மையான, முகப்பருக்கள் இல்லாத சருமமே சுத்தமான சருமம்
குறைபாடற்ற சருமம் பொதுவாக ‘குறைபாடுகளை’ மறைக்கும் பல ஒப்பனைப் பொருள்களால் ஏற்படுகிறது, ஆனால் இது அதிக சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஆரோக்கியமான சருமத்தை இலக்காகக் கொண்டு அதை நோக்கிப் பாடுபடுவதே சிறந்ததாகும்.
சருமப் பராமரிப்பு பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்
பொருத்தமான சவர்க்காரம், ‘மாய்ஸ்ச்சரைசர்’ மற்றும் ‘சன்ஸ்கிரீன்’ போன்ற அடிப்படை சருமப் பராமரிப்புப் பொருள்கள் அனைவருக்கும் அவசியம். அனைவரும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவது சருமப் பராமரிப்பின் முதன்மை நோக்கமாகும்.