அலி காசிம்
திரு ஆண்டி லிம்மை பேட்டி எடுக்க உட்கார்ந்த உடனேயே, அவர் என்னிடம் கேட்ட கேள்வி, நான் தமிழ் பேசுவேனா என்பதுதான்.
எனக்குத் தெரிந்த சில சொற்றொடர்களை நான் சொல்கிறேன், அவர் அதை ஒப்புவிக்கிறார், ஆனால் என்னைவிட தெளிவான உச்சரிப்புடன்.
“நாம் பேசுவது கொச்சையான ஆங்கிலம், தமிழ் போன்றது, வார்த்தைகளை இங்கும் அங்குமாக சேர்த்துக்கொள்வது,” என்று அவர் கூறுகிறார்.
நாம் என்று அவர் சொல்வது, தன்னையும் இந்தியாவில் அவருடன் பணிபுரிந்தவர்களையும் குறிப்பிடுகிறார். மேலும் விளக்கம் அளிக்கும் விதமாக அவர் சென்னையில் உள்ளவர்களுடன் பேசும் மொழியை ‘தமிமீஷ்’, அதாவது ஆங்கிலமும் தமிழும் கலந்த மொழி, என்று 17 ஆண்டுகளாக இந்தியாவில் வேலை பார்க்கும் 42 வயது ஆண்டி லிம் சொல்கிறார்.
“அங்கு சென்றவுடனேயே அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அங்குள்ள பெரும்பாலான பொறியாளர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர், ஆனால் ஓட்டுநர்கள், மற்றவர்கள், அவர்களுடன் ஆங்கிலம் பேசுவது சரிவராது,” என்று திரு லிம் கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் மிசோரமில் இருந்து மும்பை வரை தான் பணிபுரிந்த இடங்களை திரு லிம் பட்டியலிடத் தொடங்கினார். இதில் தன்னை மிகவும் கவர்ந்திழுத்த இடங்கள் பற்றி குறிப்புகள் தந்தார்.
திரு லிம் ஒரு சாதாரண சிங்கப்பூர் சீனர் அல்லர் என்பதை சற்று நேரத்திலேயே உணர்ந்தேன்.
சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியில் மின்னியல், கணினி, தொடர்புத் துறையில் 25 வயதில் பட்டயம் பெற்றபோது திரு லிம் இந்தியாவில் தனது வாழ்க்கைத் தொழிலை ஆரம்பிக்கும் அசாதாரணமான முடிவை எடுத்தார்.
‘புரோ-பேக் மட்டீரியல்ஸ்’ என்ற அவரது நிறுவனம் தயாரிக்கும் இல்லத்தை தூய்மைப் படுத்தும் மின் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்ய அங்கு சிங்கப்பூரர் ஒருவர் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியமாயிற்று.
இளமை, உலக அனுபவ நாட்டம் இவற்றில் ஆர்வம் கொண்ட திரு லிம்முக்கு இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் இங்கிருக்காது என்பது தெரிந்தது.
“எனது கல்விப் பயணம் நிறுவனத்தில் நான் பணிபுரிவதானால் கீழ்நிலையில் நான் இருந்திருப்பேன். ஆனால், இந்தியாவில் எனது திறமையை நிரூபிக்கி எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது,” என்று இவர் கூறகிறார்.