ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதியன்று பிற்பகலில் உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் ‘தமிழ் நேர்காணல் போட்டி’ எனும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதற்கு ‘தமிழர் தகவல் தொழில்நுட்ப சமுதாயம் சிங்கப்பூர்’ ஏற்பாடு செய்தது. 1955ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இவ்வாண்டு தன் 70ஆம் ஆண்டு நிறைவையும் கொண்டாடுகிறது.
இதற்கு முன்பு, 2022ல் முதன்முறையாக இப்போட்டி இளையர்களுக்காக நடத்தப்பட்டது.
ஆனால் இவ்வாண்டு, பாலர் பள்ளி மாணவர் முதல் பெரியவர் வரை மொத்தம் ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
“பட்டறிவு, நுண்ணறிவோடு கேள்வியறிவும் மிக அவசியமானது. எத்தகைய கேள்விகளைக் கேட்கிறோம் என்பது முக்கியம்,” என்றார் அமைப்பின் தலைவர் முனைவர் மா.கோவிந்தராசு.
ஒவ்வொரு பிரிவிலும் வாகைசூடியவர்கள் தங்கள் நேர்காணல்களைப் படைத்தனர். நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் பொதுவாக சிங்கப்பூரில் தமிழ்மொழிப் புழக்கத்தைப் பற்றி அமைந்தன.
பாலர் பள்ளி முதல் தொடக்கநிலை 3 வரையிலான பிரிவில் முதல் பரிசை வென்றார் புக்கிட் வியூ தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை மூன்று பயிலும் நேஹாஸ்ரீ.
“சிங்கப்பூரில் தமிழ்மொழிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?”, “தமிழில் பேசுவதற்கும் ஆங்கிலத்தில் பேசுவதற்கும் எத்தகைய வேறுபாடுகளை உணர்கிறீர்கள்?” ஆகிய கேள்விகளை அவர் இரு சக மாணவர்களிடம் எழுப்பினார்.
ஆனந்தகண்ணன் சவால் கேடயத்தை லோடஸ் பிரிட்ஜ் அனைத்துலகப் பள்ளி வென்றது.
சிறப்பு விருந்தினர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், “நீங்கள் என்ன படித்தாலும் தமிழ்மொழியையும் தமிழில் பேசுவதையும் விட்டுவிடாதீர்கள்,” எனக் கூறினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக, செயற்கை நுண்ணறிவு மூலம் பாரதியாருக்கும் செயற்கை நிருபருக்கும் இடையே ஒரு நேர்காணல் நடைபெற்றது.
மற்றோர் அங்கமாக, ஆயிரம் மகளிர் நடன விழாவை முன்னிட்டு, அமைப்பின் மகளிர் பேரணி, சிங்கப்பூரில் தமிழர்களின் வரலாற்றைச் சித்திரிக்கும் வகையில் நடனமாடியது.
‘சங் நிலா உத்தாமா’ 1299ல் சிங்கப்பூரைக் கண்டுபிடித்தது, சிங்கப்பூரின் ஐந்தாம் அரசர் பரமேஸ்வரா ஆட்சிபுரிவது போன்ற காட்சிகள் நடனத்தில் சித்திரிக்கப்பட்டன.
“தமிழ் பேசுவோர் விகிதம் கட்டிக்காக்கப்பட வேண்டும்,” என திரு தினகரன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கோரிக்கை, சிங்கப்பூரில் தமிழர் வரலாற்றைக் குறித்த காணொளியிலும் இடம்பெற்றது.
வெற்றியாளர்கள்
நேர்காணல் போட்டிகளில் பாலர் பள்ளி முதல் தொடக்கநிலை 3 வரை உள்ள பிரிவில் நேஹாஸ்ரீ, தொடக்கநிலை 4 முதல் 6 வரை பிரிவில் ரமேஷ் ஆத்மிகா, உயர்நிலை, தொடக்கக் கல்லூரி, ‘ஐடிஈ’ பிரிவில் நிரஞ்சன் முத்துகுமார், பலதுறைத் தொழிற்கல்லூரி/பல்கலைக்கழகப் பிரிவில் ஹரினி மதிவாணன், பெரியோர் பிரிவில் அஷோக் ஆகியோர் வென்றனர்.