ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடந்த முத்தமிழ் விழா 2024, தொடக்கநிலை மாணவர்கள் சங்க காலக் காப்பியங்களில் தம்மைக் கவர்ந்த கதாமாந்தர்கள்போல வேடமிட்டு மேடையேறி மக்களது மனங்களைப் பறித்தனர் பிஞ்சு இளம் தமிழ் நெஞ்சங்கள்.
ரவி சிங்காரம்
தொடக்கநிலை 1,2 பிரிவில் கண்ணகியாக ஆவேச முழக்கமிட்டு, பாண்டியனின் அநீதியைத் தட்டிக் கேட்ட பொங்கோல் கோவ் தொடக்கப்பள்ளியின் ஏ ஆர் ஃபாஹிமாவின் நடிப்புக்கு அரங்கு முழுவதும் கரகோஷம் எழுந்தது. அவர் முதல் பரிசைப் பெற்றார்.
இரண்டாம் நிலையில் அர்ஜுனனாக வேடமிட்ட ஜெமின் தொடக்கப்பள்ளி மாணவர் அறிவு அலங்காரன் அறநேசன், மூன்றாம் நிலையில் இராஜராஜ சோழனாக வேடமிட்ட செம்பவாங் தொடக்கப்பள்ளி மாணவர் அப்துல் அஸிஸ் ஷான் ஆகியோர் வாகை சூடினர்.
மேலும் மூன்று ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பாஞ்சாலியாக வேடமிட்ட பிரபு கேப்ரியேலா, ‘இராஜராஜ சோழன்’ செந்தில்குமார் ஆதவன், மற்றொரு கண்ணகி அக்ஷரா ஜெயராமன், ஆகியோர் ஊக்கப் பரிசு பெற்றார்.
பாலர்பள்ளிப் பிரிவில் இராமனாக கணைகளைத் தொடுத்த ரெயான்ஷ் ரகுராமன் தத்ரூபமான வேடத்தோடு, வீர வசனங்கள் பேசி வெற்றி பெற்றார். வேலு நாச்சியாராக வேடமிட்ட அதிதி பார்த்திபன், ஜெயக்குமார் சங்கீதா ஷார்வி ஆகியோர் இரண்டாம், மூன்றாம் நிலைகளைப் பிடித்தனர்.
நந்தினி, மணிமேகலை, பாரதியார், ஒளவையாராக வேடமிட்ட கிரித்தி டெட்டு கொமாண்டுர், ஜெயக்குமார் சங்கீதா ஷாக்ஷி, ஹரிடே தீப்தி விஜய், அனிக்கா நிஷாந்த் ஊக்கப் பரிசுகள் பெற்றனர்.
“நம் சிறுவர்கள் மாறுவேடப் போட்டியில் ஆயுதங்களை ஏந்துவதைக் காணும்போது, தமிழ்மொழியையும் நன்கு காப்பர் என்பதில் ஐயமில்லை.” என்றார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை.
“மிகச் சிறுவயது சிறுவர்களால்கூட தம் கதாபாத்திரத்தையும் வசனங்களையும் புரிந்துகொண்டு பேசமுடிந்தது வியப்பூட்டியது. அவர்களது ஞாபகசக்தி, மேடையில் அச்சமின்றி பேசும் ஆற்றல் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன. அனைவரும் சிறப்பாகச் செய்தார்கள்,” என்றார் மாறுவேடப் போட்டி நீதிபதிகளில் ஒருவரான தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர்.
மார்ச் 10ஆம் தேதி தொடக்கநிலை மாணவர்களுக்கும் மார்ச் 17ஆம் தேதி உயர்நிலை மாணவர்களுக்கும் ஈசூன் உயர்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெற்றன.
தொடக்கப்பள்ளி பேச்சுப் போட்டியில் சீஷான் தொடக்கப் பள்ளியின் பாலாஜி கனிஷ்கா, கதை சொல்லும் போட்டியில் ஃபூஹுவா தொடக்கப்பள்ளியின் ஜோசிக்கா குமரவேல் வென்றனர்.
உயர்நிலை 4, 5, பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் பயிலரங்கும் பிப்ரவரி 18ஆம் தேதியன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது.