சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று புதன்கிழமை (டிசம்பர் 27) அதிகாலையில் விபத்துக்குள்ளானது.
ஜோகூரிலுள்ள நெடுஞ்சாலை வழியாகச் சென்றபோது, கூலாய் அருகே அப்பேருந்து வழுக்கிச் சென்று, பக்கவாட்டில் கவிழ்ந்தது.
விபத்து நிகழ்ந்தபோது பயணிகள் பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக திரு ஜெரமி சுவா, 27, என்ற பயணி கூறினார். அவர் தன் காதலியுடன் அதில் பயணம் செய்தார்.
பேருந்து விபத்துக்குள்ளானபோது கனமழை பெய்துகொண்டிருந்ததாகத் திரு சுவா குறிப்பிட்டார்.
அப்பேருந்தில் நான்கு குழந்தைகள் உட்பட 37 பேர் இருந்ததாக மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறை தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்தது.
திரு சுவாவும் இரு பெண் பயணிகளும் காயமடைந்தனர் என்றும் அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது என்றும் அது குறிப்பிட்டது.
விபத்து குறித்து அதிகாலை 4.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் கூலாய் காவல்துறை தெரிவித்தது.
கனமழை பெய்ததால் பேருந்து ஓட்டுநர் அதன் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அதனால் அப்பேருந்து சாலையின் இடப்பக்கமாக வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதாகவும் காவல்துறை விளக்கியது.
காயமடைந்த பயணிகள் அவசர மருத்துவ வாகனம் மூலம் ஜோகூரின் குலுவாங்கில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்ததும் திரு சுவாவின் குடும்பத்தினர் சிங்கப்பூரிலிருந்து அவசர மருத்துவ வாகனத்தை அனுப்பி, அவரையும் அவருடைய காதலியையும் வரவழைத்தனர். அவர்கள் இருவரும் வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலை 8 மணியளவில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
அதே நாளில் திரு சுவாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக இருந்தது.
பேருந்து ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்னால் அமர்ந்திருந்த தம்முடைய முழங்கால் மூட்டு இரண்டாகப் பிளந்துவிட்டதாகவும் தம்மால் முழுமையாகக் குணமடைய முடியாமல் போகலாம் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் திரு சுவா சொன்னார்.