லாவண்டர் பகுதியில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்பு ஒன்றில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் அப்புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 35 பேர் பாதுகாப்பு கருதி அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இத்தீவிபத்து மின் வாகனத்தின் மின்னூட்டியில் மின்சாரம் ஏற்றும்போது ஏற்பட்ட மின் கசிவால் நடந்ததாக நம்பப்படுகிறது.
திங்கட்கிழமை புளோக் எண் 463, கிராஃபர்ட் லேனில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அன்று காலை 11.50 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காலாங் தீயணைப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 15வது மாடியில் இருந்த அவ்வீட்டின் வரவேற்பு அறையில் ஏற்பட்ட தீயைக் குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்ததாக அது தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
தாங்கள் அவ்விடத்திற்கு விரைவதற்குள்ள பாதிக்கப்பட்ட புளோக்கில் வசித்த கிட்டத்தட்ட 35 குடியிருப்பாளர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர் எனவும் இத்தீவிபத்தில் யாரும் காயமடையவில்லை எனவும் அது குறிப்பிட்டது.