‘ஆப்பிள்’ சாதனங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களின் மென்பொருளை உடனடியாக மேம்படுத்திக்கொள்ளுமாறு சிங்கப்பூர் இணைய அவசர உதவிக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான அறிவிப்பை அது வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதன் பழைய மென்பொருள் கட்டமைப்பில் இருக்கும் இரண்டு அம்சங்களை இணைய ஊடுருவிகள் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அக்குழு தெரிவித்தது.
குறிப்பிட்ட சில தயாரிப்புகளைப் பாதிக்கும் அந்த இரண்டு அம்சங்களின் பாதுகாப்பை ஆப்பிள் நிறுவனம் புதுப்பித்துள்ளதாக குழு தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
‘ஆப்பிள்’ சாதனங்களில் உள்ள தனிநபர் தகவல்கள், படங்கள், காணொளிகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் போன்ற அனைத்து தகவல்களும் திருடப்படும் சாத்தியம் அதிகம் இருப்பதால் பயனீட்டாளர்கள் தங்கள் சாதனத்தின் மென்பொருளைப் புதுப்பிக்குமாறு ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.