முதலீட்டு மோசடியில் சிக்கி, கிட்டத்தட்ட $1.5 மில்லியன் இழக்கவிருந்தவர் காவல்துறையும் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் ஜனவரி 11ஆம் தேதி நடந்தது.
அந்த 71 வயதான முதியவரிடம் வெளிநாட்டு முதலீட்டாளர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஒரு மோசடிப் பேர்வழி.
போலியான முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகம் செய்துவைத்த அவர், அவற்றில் முதலீடு செய்தால் விரைவாக வருமானம் பெறலாம் என அம்முதியவரிடம் உறுதியளித்தார். இதனையடுத்து, அம்முதியவர் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பெரிய தொகைகளை அனுப்பியதாகக் காவல்துறை திங்கட்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அம்முதியவர் அந்த வங்கிக் கணக்குகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பினார் என்ற விவரங்களைக் காவல்துறை தெரிவிக்கவில்லை.
காவல்துறையின்மோசடி தடுப்பு நிலையமும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும் இந்தப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்தன.
அந்தப் பரிவர்த்தனைகள் மூலம் மோசடிப் பேர்வழிக்குப் பணம் கைமாறியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த மோசடி குறித்து காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையம், அம்முதியவருக்குக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி எச்சரித்தது. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட வங்கியின் மோசடித் தடுப்புக் குழு, அவருடைய மின்னிலக்க வங்கிச் சேவையைத் தற்காலிகமாக முடக்கியது.
இதன்மூலம், அம்முதியவருக்குக் கிட்டத்தட்ட $1.5 மில்லியன் இழப்பு ஏற்படாமல் தடுத்து, வங்கியும் மோசடித் தடுப்பு நிலையமும் உதவியதாக காவல்துறை தெரிவித்தது.