மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக மின்சிகரெட்டுகளைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைக் குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் நால்வரும் 16 வயதுக்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதாக சுகாதார அறிவியல் ஆணையமும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் இணைந்து டிசம்பர் 28ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகள் சிங்கப்பூர் பதிவெண் கொண்ட கார் ஒன்றை இரண்டாம் கட்ட சோதனைக்குக் குறியிட்டு அனுப்பினர்.
சோதனையின் போது, அந்தக் காரின் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில், உணவுப் பைக்குள்ளும் ஒருவரின் ஆடைக்குள்ளும் 25 மின் சிகரெட்டுகளும் அவை தொடர்பான பாகங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட $200க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களும் காரில் பயணித்த நால்வரும் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள், ஜோகூர் பாருவில் உள்ள ஒரு கடைத்தொகுதியிலிருந்து மின்சிகரெட்டுகளையும் அவை தொடர்புடைய பாகங்களையும் வாங்கியதாகவும் கார்-பகிர்வு தளத்திலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட காரைப் பயன்படுத்திச் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றதாகவும் ஆணையம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.