தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (மே 16) இரவு இந்தோனீசியாவும் தாய்லாந்தும் தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் மோதின.
இரு அணிகளும் வெற்றிபெற கடுமையாகப் போராடின.
முதல் பாதியில் இந்தோனீசியா 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் தாய்லாந்து 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
தாய்லாந்து இரண்டாவது கோல் அடித்தபோது அவ்வணி வீரர்களின் கொண்டாட்டம் இரு குழுக்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.
பின்னர் வீரர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.
அதன் பின்னர் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.
இந்தோனீசியா உடனடியாக அதன் மூன்றாவது கோலை அடிக்க இரு அணிகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான மோதல் வெடித்தது.
வீரர்கள் சிலர் மாறிமாறித் தாக்கியும் கொண்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் வீரர்களைத் தடுத்து நிறுத்தினர். 4 பேருக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.
சில நிமிட இடைவெளியில் இரண்டு மோதல்கள் ஏற்பட்டதால் விளையாட்டுத் திடல் கலவர திடலாக மாறியது. பதற்றமும் அதிகரித்தது.
ஆட்ட முடிவில் இந்தோனீசியா 5 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் போது நடந்த மோதலுக்கு தாய்லாந்து காற்பந்து சங்கம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறியது.