சுகாதார அமைச்சின் ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் அனுப்பப்படும் போலிக் குறுந்தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
‘எம்ஓஎச்’ என்னும் சுகாதார அமைச்சின் முகவரியிலிருந்து ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்திற்கான குறுந்தகவல்கள் வரும் எனவும் அத்தகைய குறுந்தகவலில் உள்ள இணைப்புகள் ‘go.gov.sg’ எனத் தொடங்கும் எனவும் சுகாதார அமைச்சுச் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
“அரசாங்கம் வழங்கும் ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் இலவச சுகாதார ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே தேதியைப் பதிந்துகொள்ளுமாறு சிங்கப்பூரர்களுக்கு வெவ்வேறு கைப்பேசி எண்களிலிருந்து போலிக் குறுந்தகவல்கள் வருவது குறித்து சுகாதார அமைச்சுக்கு தகவல் கிடைத்தது,” என அமைச்சு ஆகஸ்ட் 30ஆம் தேதி பதிவிட்டிருந்த ‘X’ பதிவில் குறிப்பிட்டிருந்தது. காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தொலைபேசி எண்களின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அது சொன்னது.
“அந்தப் போலிக் குறுந்தகவல்கள் எதாவது ஒரு கைப்பேசி எண்ணிலிருந்து வரும். அதில் ‘go.gov.sg’ என்று தொடங்கும் இணைப்பு இருக்காது. அந்தக் குறுந்தகவல்கள் போலியானது என்பதற்கு இவை சான்றுகள்,” என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
மேலும், தங்களுக்குப் போலிக் குறுந்தகவல் வந்ததாகச் சந்தேகிக்கும் பொதுமக்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த இணைப்புகளையும் அழுத்தக்கூடாது என்றும் அந்த எண்ணுக்கு எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் வழங்க கூடாது என்றும் திரு ஓங் சொன்னார்.
மேலும் விவரங்களுக்கு 6325-9220 என்னும் அமைச்சின் 24 மணி நேரத் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.