யுனிக்லோ கடையில் $1,700 மதிப்பிலான ஆடைகள் திருடப்பட்ட சம்பவத்தில் மேலும் இரண்டு வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இந்திய நாட்டவர்களான பிரஹம்பட் கோமல் சேத்தன்குமார், கிறிஸ்டியன் அர்பித்தா அர்வின்பாய் ஆகிய 27 வயது பெண்களுக்கு டிசம்பர் 1 அன்று முறையே 40 மற்றும் 45 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மாணவர் அனுமதி அட்டையைக் கொண்ட அந்த வெளிநாட்டு மாணவர்கள், மேலும் 4 மாணவர்களுடன் ஒரே அடுக்குமாடி வீட்டில் குடியிருந்தனர். வேறு சிலருடன் சேர்ந்து அவர்கள் யுனிக்லோ கடைத்தொகுதியில் ஆடைகளைத் திருட சதித்திட்டம் போட்டனர்.
ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் உள்ள யூனிக்லோ கடையில் அக்டோபர் 12ஆம் தேதி திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்ததாகக் கூறப்பட்டது.
பாவிக், 24, விஷால், 23, தர்ஷன், 22 என நீதிமன்ற ஆவணங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் மூன்று இந்திய நாட்டவர்களும் இந்த சதியில் ஈடுபட்டனர். திருட்டைத் திட்டமிட்ட பாவிக், விஷால் இருவரும் மற்றவர்களைச் சேர்த்துக்கொண்டனர்.
அன்று மாலை 6 மணியளவில் அந்தக் குழு கடைக்குச் சென்றது. ஆடையைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவர்கள் ரேடியோ-அதிர்வெண் அடையாளம் கொண்ட விலைக் குறிச்சொற்களை அகற்றினர். பின்னர் தானியக்கக் கட்டணம் செலுத்தும் பகுதியில் பைகளை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தியதுபோல் உடைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். மொத்தம் $1,788 மதிப்புள்ள 64 ஆடைகளை அவர்கள் திருடிச் சென்றனர்.
சில நாள்களுக்குப் பிறகு அதே கடையிலிருந்து $2,271 மதிப்புள்ள துணிகளைத் திருட இரண்டாவது குழுவும் முயற்சி செய்தது. அதில் முதல் குழுவின் உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர்.
அவர்களது சந்தேகத்திற்கிடமான நடத்தையைக் கடையின் பாதுகாப்பு அதிகாரி கவனித்ததால், அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.
சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்தபின்னர் காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர்.
இந்தக் குழுவுடன் தொடர்புடைய மேலும் நால்வருக்குக் கடந்த நவம்பர் 22ஆம் தேதி 40 முதல் 65 நாள்கள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.