கடந்த ஈராண்டுகளாக கொள்ளைநோய் கட்டுப்பாடுகளுடன் சிவராத்திரி வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு, 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
கொண்டாட்டங்களில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து காணிக்கை செலுத்தினர்.
சனி மகா பிரதோஷமும் சிவராத்திரியும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் அமைந்தது இவ்வாண்டு வழிபாட்டின் கூடுதல் சிறப்பம்சமாகும்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகையளித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பால்குடம் ஏந்தி சன்னதியின் முன் சமர்ப்பித்தார்.
பல இன, பல சமய நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் விதமாக பிற இனத்தைச் சார்ந்த பலரும் இவ்வழிபாட்டில் கலந்துகொண்டனர். அவ்வகையில் தன்னுடைய மொத்த குடும்ப உறுப்பினர்கள் 14 பேருடன் பால்குடங்கள் ஏந்தி வழிபாட்டில் கலந்துகொண்டார் சீனரான 58 வயது லாரன்ஸ் டான்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வழிபாட்டில் தவறாமல் கலந்துகொள்வதாகவும் சிவனைத் தரிசிக்க தொடங்கியபின் தனது குடும்பத்தின் நல்வாழ்வு மேலோங்கியுள்ளதைக் கண்கூடாக காணமுடிகிறது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு டான்.
“கோயிலின் குடமுழுக்கு அடுத்த ஈராண்டுகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கோயிலின் மறுசீரமைப்புப் பணிகளின் முதற்கட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பக்தர்களின் தரிசன அனுபவத்தில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன,” என்று கூறினார் கோயில் தலைவர் யோகநாதன் அம்மையப்பன்.
சென்ற ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் 170,000 ருத்ராட்ச மணிகளால் செய்யப்பட்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டிருந்தது. மறுசுழற்சி முறையில் அம்மணிகள் அலங்கார அணிகலன்களாக மாற்றப்பட்டு பக்தர்களுக்காக விற்பனைக்கு இவ்வாண்டு அவை வைக்கப்பட்டிருந்தன.
சிங்கப்பூரிலுள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.