சிங்கப்பூரில் அதிகப்படியான கிட்டப்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் கண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
‘மையோபியா’ எனப்படும் கிட்டப்பார்வை என்பது கண் வில்லையின் புற வளைவுப் பகுதி அதிகரிப்பதினாலும் கண்கோளம் நீட்சியுறுவதாலும் ஏற்படும் ஒரு கண் நோய்.
இதனால், கண்ணுக்குள் செல்லும் ஒளிக்கதிர்கள் தேவைக்கு அதிகமாகச் சிதறலடைந்து ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்படுவதால் பிம்பம் தெளிவற்றதாக காணப்படும்.
அதிகப்படியான கிட்டப்பார்வை குறைபாட்டால் ஏழு முதல் பதினேழு வயது வரையிலான சிறார்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாக சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையத்தின் கிட்டப்பார்வை பிரிவில் பணியாற்றும் கண் மருத்துவர் ஃபூ லி லியான் கூறினார்.
2022ஆம் ஆண்டு 6,000த்திற்கும் அதிகமானோர் கிட்டப்பார்வை குறைபாட்டிற்காக சிகிச்சை பெற வந்தனர் எனவும் இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 3,206ஆக இருந்தது எனவும் கண் சிகிச்சை நிலையம் கூறியது.
“நவீன வாழ்க்கை முறையே இந்த எண்ணிக்கை அதிகரிக்க காரணம். அதாவது, படிக்கவும் மற்ற வேலைகளைச் செய்யவும் மின்னிலக்கச் சாதனத்தை அதிக நேரம் பயன்படுத்துவது, போதுமான நேரம் வெளிப்புறங்களில் செலவிடாமல் இருப்பது போன்றவை இந்த எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணங்களாக கருதப்படுகிறது,” என டாக்டர் ஃபூ தெரிவித்தார்.
“கொள்ளை நோய் காலத்தில் மாணவர்கள் கல்வியை இடைவிடாது தொடர தொலைநிலைக் கற்றல் முறைக்குக் கல்வி நிலையங்கள் மாறின. மேலும், நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டங்களால், வெளிப்புற பொழுதுபோக்கு வாய்ப்புகள் பெருமளவு குறைந்தன. இதனால் சிறார்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை மின்னிலக்கச் சாதனத்தின் திரைகளைப் பார்ப்பதிலேயே செலவிட்டனர்,” என அவர் மேலும் கூறினார்.
சிறார்களுக்குக் கண் குறைபாடு ஏற்படவும் குறைபாடுள்ள சிறார்களுக்குப் பாதிப்பு அதிகமாகவும் இவை அனைத்தும் முக்கியக் காரணங்களாக உள்ளன எனக் கூறப்பட்டது.