பயன்படுத்தப்பட்ட ‘சாப்ஸ்டிக்ஸ்’ஐ எவ்வாறு புதுமையாக மாற்றியமைக்கலாம் என்பதை யோசித்து பார்ப்பது சற்று சிரமம்தான்.
இருந்தாலும், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு நிறுவப்பட்ட ‘சாப்வேல்யூ சிங்கப்பூர்’ நிறுவனம், வீசி எறியப்பட்ட ‘சாப்ஸ்டிக்ஸ்’ஐ கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த அறைகலன்களைச் செய்துவருகிறது.
தம்பதியர் இவிலின் ஹியூவும் ஜஸ்டின் லீயும் இந்த நிறுவனத்தை சிங்கப்பூரில் தொடங்கினர்.
இந்தப் புதுமையான சிந்தனையுடன் தொடங்கப்பட்ட இத்தொழிலினால், இதுவரை 12 மில்லியனுக்கும் மேற்பட்ட ‘சாப்ஸ்டிக்ஸ்’லிருந்து 584,208 கிலோகிராம் எடையிலான கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்நிறுவனத்திற்கு வட அமெரிக்கா முதல், தென்கிழக்கு ஆசியா வரை 10 தொழிற்சாலைகள் உள்ளன.
‘சாப்வேல்யூ சிங்கப்பூர்’ல் ஏழு உற்பத்தி ஊழியர்களும் ஏழு நிர்வாக ஊழியர்களும் மட்டுமே உள்ளனர்.
பயன்படுத்தப்பட்ட ‘சாப்ஸ்டிக்ஸ்’ஐ சேகரிக்க, ‘சாப்வேல்யூ’ நிறுவனம், ‘ஃபிரேசர்ஸ் புராஃப்பர்டி’ கடைத்தொகுதிகள், யூஹுவாவில் உள்ள உணவங்காடி நிலையங்கள், லாவ் பா சாட் போன்ற இடங்களுடன் இணைந்துசெயல்படுகிறது.
அவ்வப்போது அஞ்சல்பெட்டிகளில்கூட பயன்படுத்தப்பட்ட ‘சாப்ஸ்டிக்ஸ்’ அந்நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் ஓட்டுநர் திரு அழகர் தினேஸ் பாபு, 30, ‘சாப்ஸ்டிக்ஸ்’ஐ பெறுவதற்காகச் செல்வார்.
அவை அனைத்தையும் பெற்றவுடன், திரு பாபு தொழிற்சாலைக்குத் திரும்புவார். அந்த ‘சாப்ஸ்டிக்ஸ்’ பதப்படுத்தப்படுவதற்கு முன்னர், அவை இரும்புக் கூண்டுகளில் வைக்கப்படும். ஒரு ‘சாப்ஸ்டிக்ஸ்’ பை, சில கிராம் முதல் கிட்டத்தட்ட 15 கிலோகிராம் வரை எடை கொண்டது.
பயன்படுத்தப்பட்ட ‘சாப்ஸ்டிக்ஸ்’ பல்வேறு கட்டங்களைத் தாண்டி, பின்னர் இறுதியில் வெவ்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களாக மாற்றி அமைக்கப்படுகின்றன.
மறுபயனீடு செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதே, மறுபயனீடு செய்வதாகும் என்று திரு லீயும் திருவாட்டி ஹியூவும் நம்புகின்றனர்.