சட்டவிரோத மென்பொருள் மூலம் தொடர்ந்து நடைபெற்ற இணைய வங்கி மோசடிகளுக்குத் துணைபோன சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேர்மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.
அவர்களில் ஆறு பேர் 19க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர் எனவும் மூன்று பேர் 16க்கும் 18க்கும் இடைப்பட்ட இளையர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றுவதற்காக தங்கள் வங்கி கணக்குகளை மோசடிக்காரர்களிடம் அளித்ததாகக் கூறப்பட்டது.
பணத்துக்காக தங்களது வங்கிக் கணக்குகள், இணைய வங்கி மற்றும் சிங்பாஸ் விவரங்களை அளித்ததன் மூலம் வங்கி மோசடிகளுக்கு வேண்டுமென்றே அவர்கள் துணைபோனது விசாரணையின்போது தெரிய வந்தது.
அண்மைக்காலமாக நடந்துவரும் மோசடிகளுடன் அவர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிப்பதால் காவல்துறை அவர்களைக் கைது செய்தது.
தங்களது வங்கிக் கணக்குகளையும் சிங்பாஸ் விவரங்களையும் தெரிவிக்காதபோதிலும் சமூக ஊடக விளம்பரங்களைப் பயன்படுத்தும்போது மோசடிக்காரர்களின் வலையில் பாதிக்கப்பட்டவர்கள் சிக்குகிறார்கள்.
துப்புரவு, செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் மளிகைச் சாமான்கள் தொடர்பான விளம்பரங்கள் அவை.
சமூக ஊடகத்தில் வெளியாகும் விளம்பரங்களைக் கண்டு தொடர்புகொள்ளும்போது ஆண்ட்ராய்ட் கைப்பேசிக்கான மோசடி மென்பொருளை பதிவிறக்கம் செய்யுமாறு மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வர். அது மோசடி மென்பொருள் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போது தெரிவதில்லை.
அதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் கைப்பேசியை மோசடிக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சட்டவிரோதப் பரிவர்த்தனையில் ஈடுபடுவார்கள்.