செல்லப்பிராணிகளுக்காக வீட்டிலிருந்து இயங்கிய சிகை திருத்தும் வர்த்தகம் ஒன்று, அதன் சேவையை நாடியவரது நாயைத் தொலைத்துவிட்டது. அந்த நாய் பின்னர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது.
இந்நிலையில், கிம் மோ லிங்க்கில் இயங்கிவந்த ‘ஆசம் போசம்’ என்ற அந்த வர்த்தகம் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மூன்று வயது ‘கேவலியர் பூடல்’ வகை நாயான ‘எம்மா’, ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் சிகை திருத்தும் சேவைக்காக அதன் உரிமையாளரால் வீவக வீடு ஒன்றில் இயங்கிவந்த ‘ஆசம் பாசம்’ வர்த்தகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டது.
வீவக வீட்டில் இவ்வாறு செல்லப்பிராணிகளுக்கான சிகை திருத்தும் சேவை வழங்குவது சட்டவிரோதமாகும்.
வீட்டில் இருந்த பணிப்பெண்ணிடம் நாயின் உரிமையாளர் ‘எம்மா’வை ஒப்படைத்தார்.
பின்னர், மாலை 7.30 மணியளவில் எம்மாவின் சிகை திருத்தும் வேலை முடிந்துவிட்டதாக உரிமையாளருக்குக் குறுந்தகவல் கிடைத்தது.
ஆனால், அரை மணி நேரம் கழித்து எம்மா தொலைந்துவிட்டதாக இன்னொரு குறுந்தகவல் வந்தது.
வாகனத்தில் எம்மாவை ஏற்றிய சமயம் அது தப்பித்துச் சென்றுவிட்டதாகக் குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டது.
சாலை குறுக்கே ஓடிய நாய், வாகனம் மோதிப் பின்னர் மருத்துவ சிகிச்சை பலனிக்காமல் இறந்து போனது.
“வீட்டுக்கு அழகாகத் திரும்பும் என்று நினைத்துத்தான் எம்மாவை அனுப்பிவைத்தேன். ஆனால் சாம்பலாகத் திரும்பி வந்துள்ளது,” என்று ஆழ்ந்த சோகத்துடன் கூறினார் நாயின் உரிமையாளர்.
இந்தச் சம்பவம் குறித்து தேசிய பூங்காக்கள் கழகம் விசாரித்து வருகிறது.