இவ்வாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆர்ச்சர்ட் ரோட்டில் மிகவும் வண்ணமயமாகவும் பிரகாசமாகவும் மாயாஜாலம் நிறைந்ததாகவும் இருக்கும்.
இவ்வாண்டு பார்வையாளர்களைக் கவர மூன்று பெரிய கிறிஸ்துமஸ் கிராமங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் கொண்டாடத்தையொட்டி ஆர்ச்சர்ட் ரோடு வீதிகளில் கொண்டாட்ட நிகழ்வுக்கு முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான கிறிஸ்துமஸ் விழாவை அதிபர் தர்மன் சண்முகரத்னம் ‘ஷா ஹவுஸ் அர்பன் பிளாசா’வில் நவம்பர் 16ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைப்பார்.
ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் விடுமுறைக் காலமான டிசம்பரில் ஆர்ச்சர்ட் ரோட்டில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.
ஆர்ச்சர்ட் ரோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் 40 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் வகையிலும் ஆர்ச்சர்ட் ரோடு வர்த்தக சங்கத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் விதத்திலும் இவ்வாண்டு கேளிக்கை நிறைந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள் இடம்பெறும் தெரு கேளிக்கை நிகழ்ச்சி, பேட்டர்சன் சந்திப்பிலிருந்து பைட்ஃபர்ட் சந்திப்பு வரை நடைபெறும். அப்பகுதியில் உள்ள சாலை அன்று மாலை 6 மணி முதல் போக்குவரத்துக்கு மூடப்படும்.
இரவு 8 மணிக்குத் தொடங்கும் இந்தத் திருவிழா நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெறும்.
இந்தத் திருவிழாவில் விருந்து நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் பாடல்கள், சாண்டாவுடன் சந்திப்பு மற்றும் வாழ்த்து அமர்வுகள், உணவு லாரிகள், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் நிகழ்வு ஆகியவை இடம்பெறும்.
கடந்த ஆண்டு ஆர்ச்சர்ட் ரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது என ஆர்ச்சர்ட் ரோடு வர்த்தக சங்கத் தலைவர் மார்க் ஷா கூறினார்.
மேலும், இந்த ஆண்டு பண்டிகைக் கொண்டாட்டங்கள் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடக்கூடிய வகையில், ஐந்து முதல் ஆறு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு முதல்முறையாக நடைபெறும் தெரு கேளிக்கை நிகழ்ச்சிகளில் திரளும் கூட்டத்தைச் சமாளிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சங்கம் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாக திரு ஷா கூறினார்.
ஷா ஹவுஸ் அர்பன் பிளாசாவில் அமைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் கிராமத்தைப் பார்வையாளர்கள் நவம்பர் 24ஆம் தேதி முதல் பார்வையிடலாம். அங்கு பல்வேறு சவாரிகளுக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.