சிங்கப்பூரில் தொடர்ச்சியாக நடந்த மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் 227 பேரை விசாரித்து வருகின்றனர்.
அந்த மோசடிகளில் மொத்தம் $8 மில்லியனுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டன.
பதினைந்து முதல் எழுபது வயது வரையிலான 158 ஆண்களும் 69 பெண்களும் 1,000க்கும் அதிகமான சம்பவங்களில் ஈடுபட்ட மோசடிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இணையக் காதல் மோசடிகள், வேலை மோசடிகள், மின்வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள், அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள் முதலியவை அவற்றில் அடங்கும்.
பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 15 வரை, தீவு முழுதும் இரண்டு வாரங்கள் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் அந்தச் சந்தேகப் பேர்வழிகள், ஏமாற்றுச் செயல்கள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய செயல்கள், உரிமமற்ற கட்டணச் சேவைகளை வழங்கியது போன்றவற்றுக்காக விசாரிக்கப்படுகின்றனர்.
ஏமாற்றுக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள்வரை சிறைத்தண்டனையோ அபராதமோ விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள்வரை சிறைத்தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.