இந்தியாவின் 75வது குடியரசு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்திய அதிபர் திரௌபதி முர்முவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துக் கடிதம் அனுப்பியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சிங்கப்பூரும் இந்தியாவும் ஒரு நீண்ட, அன்பான பங்காளித்துவத்தைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் இரு நாட்டு மக்களிடையே இருக்கும் உறவுகள் மூலமும் பல துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒத்துழைப்பு மூலமும் அது பிரதிபலிக்கிறது என்றும் இந்திய அதிபர் முர்முவுக்கு அதிபர் தர்மன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டார்.
நீடித்த நிலைத்தன்மை, மின்மயமாக்கல் போன்ற துறைகளில் சிங்கப்பூரும் இந்தியாவும் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன என அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில், இந்தியாவில் நடந்த ஜி-20 தலைவர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்குத் திருவாட்டி முர்முவுக்கு அவர் வாழ்த்துக் கூறினார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற நான் விரும்புகிறேன்,” என்றார் அதிபர் தர்மன்.
“சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆழமான நீண்ட கால நட்பு இருக்கின்றது. வர்த்தகம், நிதி, தற்காப்பு போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒத்துழைப்பு மூலமும் இரு நாட்டு மக்களிடையே இருக்கும் உறவுகள் மூலமும் அது பிரதிபலிக்கிறது,” எனப் பிரதமர் லீ, இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூர்-இந்தியா அமைச்சுநிலை கூட்டத்தின் பயனாக இரு நாடுகளும் உணவுப் பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை, திறன்மேம்பாடு, மின்னிலக்கமயம் போன்ற புதிய அம்சங்களில் ஒத்துழைப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
பிரமர் லீயும் ஜி-20 தலைவர்கள் மாநாடு வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.