சிங்கப்பூருக்குப் பெரும் சவாலாக வளர்ந்துவரும் மூலதனம், திறமை, உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இருக்கும் பற்றாக்குறையைச் சமாளிக்க புத்தாக்கம், உற்பத்தித்திறன் அதிகரிப்பு, உலகப் பொருளியலுடன் மேம்படுத்தப்பட்ட இணைப்பு ஆகியவை உதவும் என மனிதவள அமைச்சரும் வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஷா அறக்கட்டளை முன்னாள் மாணவர் இல்லத்தில் நடைபெற்ற செயின்ட் கேலன் கருத்தரங்கில் ஜனவரி 25ஆம் தேதி உரையாற்றிய போது திரு டான் இவ்வாறு தெரிவித்தார்.
இளையர்கள், கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களை இந்தக் கருத்தரங்கு ஒன்றிணைக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்டனர்.
“புவிசார் அரசியல் பதற்றங்களால் சிங்கப்பூரின் வளங்களுக்கு முட்டுக்கட்டைகள் அதிகரித்துள்ளன. அத்தகைய பதற்றங்கள் அரசியல் மட்டுமல்ல, வர்த்தகம், தொழில்நுட்பம், தற்காப்பு ஆகியவற்றிலும் ஊடுருவியுள்ளன.
“உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் இடையூறுகளால் அதிகளவில் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இதனால், பல நாடுகளின் செயல்திறன்கள் மட்டுப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் வளங்களுக்கான தேவையைப் பூர்த்திச் செய்யவும் அதை அணுகவும் தடுமாறுகின்றன.
“இந்த அழுத்தங்கள் சிறிய நாடுகளிலும், சிங்கப்பூர் போன்று தங்கள் வளத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வர்த்தகத்தை நம்பியிருக்கும் இன்னும் சில நாடுகளிலும் இது தீவிரமாக உணரப்படுகின்றன.
“நமது தொழிலாளர்களின் தரத்தை உயர்த்துவதிலும் அவர்களின் ஒதுக்கீட்டை மேம்படுத்துவதிலும் பொருளியலை வலுப்படுத்துவதற்கு உதவும் துறைகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான உத்திகள் மூலம் நாம் இதைச் செய்ய வேண்டும்,” என டாக்டர் டான் எடுத்துரைத்தார்.