ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததன் தொடர்பில் ஃபேஸ்புக் தளத்தில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதை அடுத்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதற்காக அமைச்சர்கள் கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் திரு லீ சியன் யாங்கிடமிருந்து இழப்பீடு கோருகின்றனர்.
தங்களுக்குரிய இழப்பீட்டை மதிப்பிடுவதற்கான விசாரணைக்காக உயர் நீதிமன்றத்திற்கு இரு அமைச்சர்களும் மே 2ஆம் தேதி வந்திருந்தனர்.
அமைச்சர்கள் இருவரும் தாங்கள் சமர்ப்பித்த ஆணைப் பத்திரங்களின் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்த, சிறிது நேரம் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தனர்.
திரு லீ சியன் யாங் நீதிமன்றம் வரவில்லை.
நீதிமன்ற விசாரணை சுமார் 20 நிமிடங்களில் நிறைவுபெற்றது.
அதையடுத்து, தாங்கள் கோரும் இழப்பீடு குறித்து திரு சண்முகமும் திரு விவியனும் தொகை ஏதும் குறிப்பிடவில்லை என்றும் அதை நீதிமன்றத்திடமே விட்டுவிடுகின்றனர் என்றும் இரு அமைச்சர்களின் சார்பாக வழக்காடும் மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.
தமது அவதூறு பதிவால் ஏற்பட்ட விளைவுகளை திரு லீ சியன் யாங்கின் நடத்தை மேலும் மோசமாக்கியுள்ளதாக திரு சிங் வாதிட்டார்.
சட்டரீதியாக உத்தரவு இடப்பட்டும் திரு லீ சியன் யாங் தமது பதிவுக்காக மன்னிப்பு கேட்கத் தவறிவிட்டதாக அவர் கூறினார். அதற்குப் பதிலாக, இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக பொது இயக்கம் ஒன்றை அவர் தொடங்கி சிங்கப்பூரர்களிடமிருந்து அனுதாபத்தையும் ஆதரவையும் பெற முற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அவதூறுப் பதிவு தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் விதமாகப் பல ஃபேஸ்புக் பதிவுகளை திரு லீ சியன் யாங் பதிவிட்டும் தாம் கூறியது உண்மை என்று அவர் ‘ஒருபோதும் கூறவில்லை’ என்று வழக்கறிஞர் சுட்டினார்.
“இது குறிப்பிடத்தக்க ஒன்று. தான் கூறியது உண்மை என்று சொல்ல நீதிமன்றத்திற்கு அவர் வரவில்லை. அவரது புண்படுத்தும் சொற்கள் பொய் என்று அவர் அறிந்திருக்கிறார்,” என்றார்.
உள்துறை, சட்ட அமைச்சரான திரு சண்முகம், வெளியுறவு அமைச்சரான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரு லீ சியன் யாங்குக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே அவதூறு வழக்குகளைத் தொடுத்திருந்தனர்.
அதே ஆண்டு ஜூலை மாதம் திரு லீ சியன் யாங்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு தொடர்பாக இந்தச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.