சிங்கப்பூரில் தொழில் செய்வோரிடையே நம்பிக்கை தொடர்ந்து கூடி வருகிறது.
தொழில் நம்பிக்கைக் குறியீடு தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக ஏற்றம் கண்டுள்ளதைத் திங்கிட்கிழமையன்று (மார்ச் 11) சிங்கப்பூர் வணிகக் கடன் பிரிவு வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் 4.48 விழுக்காட்டுப் புள்ளிகளாக இருந்த தொழில் நம்பிக்கைக் குறியீடு, இரண்டாம் காலாண்டில் 4.82 விழுக்காட்டுப் புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
ஆண்டு அடிப்படையில் ஒப்புநோக்கினாலும் இது அதிகம்தான். 2023 இரண்டாம் காலாண்டில் தொழில் நம்பிக்கைக் குறியீடு 4.6 விழுக்காட்டுப் புள்ளிகளாக இருந்தது.
முந்திய காலாண்டைப் போலவே, 2024 இரண்டாம் காலாண்டிலும் விற்பனை அளவு, விற்பனை விலை, நிகர லாபம், புதிய பணிப்புகள், வேலைவாய்ப்பு நிலை ஆகியவை விரிவாக்கம் கண்டிருப்பதை அத்தரவுகள் காட்டுகின்றன.
துறைசார்ந்து பார்த்தால், முந்திய காலாண்டைப் போலவே கட்டுமானமும் போக்குவரத்தும் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் துறைகளாகத் திகழ்கின்றன.
நிதி, உற்பத்தி, சேவைத் துறைகள் மீதான நம்பிக்கையும் சற்றுக் கூடியுள்ளது.
மாறாக, முந்திய காலாண்டைப் போலவே மொத்த விற்பனைத் துறை மீதான நம்பிக்கை மட்டும் மந்தமாக உள்ளது. அத்துறையில் விற்பனை அளவு, நிகர லாபம், புதிய பணிப்புகள் ஆகிய குறியீடுகள் இறக்கம் கண்டுள்ளன.
“கட்டுமானம், போக்குவரத்துத் துறையில் நீடித்த வளர்ச்சியைக் காண்கிறோம். அத்துடன், உற்பத்தி, நிதித் துறைகளும் மீட்சி கண்டுள்ளன.
“இருப்பினும், நிலவிவரும் புவிசார் அரசியல் பதற்ற நிலைகளாலும் மொத்த வணிகத் துறையின் வளர்ச்சிக் குறைவாலும் உலகளவில் விநியோகச் சங்கிலி இறங்குமுகத்தில் இருப்பதற்கான அபாயம் நீடிக்கிறது,” என்று சிங்கப்பூர் வணிகக் கடன் பிரிவின் தலைமை நிர்வாகி ஆட்ரி சியா குறிப்பிட்டார்.