வாஷிங்டன்: அனைத்துலக விநியோகத் தொடர்கள் தற்போது பெரும் மாற்றங்களைக் கண்டு வந்தாலும், புதிதாக உருவாகும் கட்டமைப்புகளில் சிங்கப்பூருக்கு இடம் உண்டு என்பதை நாட்டின் மீதுள்ள நம்பிக்கை உறுதிசெய்யும் என்றார் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்.
“வருங்காலத்தில் சவால்கள் இருக்கவே செய்யும். நாம் தடையற்ற வர்த்தக உடன்பாட்டை 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதிலிருந்து உலகம் மிகவும் மாறுபட்டுள்ளது. ஆனால், சரக்குகள் கைமாறுவதற்கும் வர்த்தகம் நடைபெறுவதற்கும் அனைத்துலக பொருளியலின் முக்கிய அங்கமாக வர்த்தகம் தொடர்ந்து இருக்கும்,” என்று ஊடகப் பேட்டி ஒன்றில் திரு கான் மே 1ஆம் தேதி கூறினார்.
அமெரிக்காவுக்கு நான்கு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள அவர், அமெரிக்காவுடனான 20 ஆண்டுகால தடையற்ற வர்த்தக உடன்பாட்டை அனுசரிக்கும் வகையில் அமைந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
எதிர்வரும் நவம்பர் 5 அதிபர் தேர்தலுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனோ அவரின் குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர் டோனல்ட் டிரம்ப்போ வர்த்தகம் தொடர்பில் அதிக நாட்டம் ஏதும் காட்டுவதாக இல்லை.
“20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இல்லாமல் போகலாம். இன்று விநியோகத் தொடர் மீள்திறன் மீதும் தேசிய பாதுகாப்பு மீதும் கவனம் கூடுதலாகியுள்ளது,” என்று அனைத்துலக வர்த்தக வாய்ப்புகளைக் குலைக்கும் அதிகரித்த புவிசார் போட்டித்தன்மை குறித்தும் பாதுகாப்புவாதக் கொள்கைகள் குறித்தும் திரு கான் கூறினார்.
“எனவே வர்த்தக, விநியோகத் தொடர் கட்டமைப்பில் மறுசீரமைப்பும் இடமாற்றமும் இருக்கும். இந்தச் செயல்முறை காரணமாக வாய்ப்புகள் ஏற்படும்,” என்று குறிப்பிட்டார் அமைச்சர் கான்.
இதற்கிடையே, விநியோகத் தொடரின் தற்போதைய மறுசீரமைப்பைச் சரியாகச் செய்யாவிட்டால் அனைத்துலக பொருளியல் அமைப்புமுறைக்குச் செலவுகள் வந்து சேரும் என்று திரு கான் எச்சரித்தார்.