இவ்வாண்டு 25வது முறையாக இடம்பெற்ற சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2022 கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
கொவிட்-19 நோய்ப்பரவல் சூழலுக்குப் பின்னர் நேரடி நிகழ்வுகளுடன் திரும்பிய இவ்விழா, பல புதிய அங்கங்களைக் கொண்டிருந்தது.
கடந்த மாதம் 4லிருந்து 20ஆம் தேதி வரை, மூன்று வார இறுதிகளுக்கு நீடித்த இவ்விழாவை ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிடெட் மற்றும் தேசிய கலைகள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்கு மொழிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் மொத்தம் 46,000 பேர் கலந்துகொண்டனர். ‘எனில்' என்ற தலைப்பினில், உரைகள், பயிலரங்குகள், கலந்துரையாடல்கள், கலைப் படைப்புகள் என 300 நிகழ்வுகள் விழாவில் இடம்பெற்றன.
இவ்வாண்டு முதன்முறையாக அமைக்கப்பட்ட வெளிப்புற ‘ஃபெஸ்டிவெல் வில்லேஜ்' பகுதி, நேரடி இசை நிகழ்வுகள், சிறார் கதைநேர நிகழ்வுகள் என களைகட்டியது.
இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாடுகளிலிருந்து வருகை புரிந்திருந்த வெளியூர் எழுத்தாளர்கள், உள்ளூர் எழுத்தாளர்கள் என மொத்தம் 360க்கும் மேற்பட்டோர் இவ்வாண்டின் விழாவில் கலந்துகொண்டு பேசி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
டிராட்ஸ்கி மருது, தாமஸ் புரூக்ஸ்மா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுனில் கிருஷ்ணன், எம். டி. முத்துக்குமாரசாமி முதலிய பல படைப்பாளர்கள் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு புது கண்ணோட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
வாசகர் வட்டம், கவிமாலை, சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் முதலிய உள்ளூர்த் தமிழ் அமைப்புகளும் இவ்விழாவில் பலதரப்பட்ட நிகழ்வுகளைப் படைத்தன.
பன்முகத்தன்மைவாய்ந்த இலக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்குபெற்று, பெரியோர், சிறார், இளையர்கள் பலரும் பயனடைந்தனர்.
சிங்கப்பூரில் இளையர் இலக்கியம், இளையர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், நவீன இலக்கியத்தில் இளையர்களின் பங்கு முதலிய கருத்துக்களை விழாவின் இளையர் நிகழ்வுகள் அலசி ஆராய்ந்தன.
“சிங்கப்பூர் போன்றதொரு சிறு நகரத்தில் இத்தகைய இலக்கிய நிகழ்வு 25வது முறையாக நடைபெறுவது பாராட்டுக்குரியது. இலக்கிய கலைகளின்பால் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது பறைசாற்றுகிறது,” என்றார் விழா இயக்குநர் பூஜா நேன்சி.
சிறு சிறு செயல்களும் எண்ண மாற்றங்களும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை என்பதை இவ்விழா நினைவூட்டியதாகவும் அவர் கூறினார்.