சிங்கப்பூர் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் இணைந்து திங்கட்கிழமை பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தின.
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்தப் பயிற்சி நடந்தது.
இந்த ஒத்திகை மில்லெனியா சிங்கப்பூர் ஒருங்கிணைந்த வளாகத்தில் நடந்தது. ‘ஹார்ட்பீட்’ எனப் பெயரிடப்பட்ட இந்த ஒத்திகையில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் காவல்துறையைச் சேர்ந்த அவசரகால நடவடிக்கைக் குழு உட்பட பல பிரிவைச் சேர்ந்த அவசரகால உதவி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஒத்திகையைப் பார்வையிட்ட உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், “உலகளாவிய மோதல்களும் போர்களும் நிறைந்த நிச்சயமற்ற காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று,” எனக் கூறினார்.
கொவிட் -19 கொள்ளைநோய் காலத்திற்குப் பிறகு நடைபெறும் முழு அளவிலான பயங்கரவாத பயிற்சி இதுவாகும். கடந்த ஆண்டு சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் சிறிய அளவிலான ஒத்திகை மற்ற அவசரகால குழுக்களின் பங்களிப்பின்றி நடந்தது.
தன்னார்வளர்களும் அதிகாரிகளும் பயங்கரவாத எதிர்ப்புக் காட்சிகளைத் தத்ரூபமாக நடத்திக் காட்டினர் என காவல்துறை கூறியது.
இந்தப் பயிற்சியில் தற்கொலைப் படைத் தாக்குதல், பொதுமக்கள்மீது வாகனத் தாக்குதல், பொதுமக்களைப் பிணைப் பிடிப்பது போன்றவை இடம்பெற்றன.