கிளி மனிதன் என்றழைக்கப்படும் செங் குவோயுவான் நேற்று முன்தினம் இரவு கேலாங் பாரு வட்டாரத்தில் உள்ள புளோக் 68க்குக் கீழே மாண்டு கிடந்தார். அந்தக் கட்டடத்தில்தான் அவரது வீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் வர்த்தகரான திரு செங் 2011ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட முயற்சி செய்தார் . ஆனால் அவரது வேட்பு மனுத் தாக்கல்களில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டன.
2014ஆம் ஆண்டில் அவருக்கு மூக்கில் புற்றுநோய் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது முகத்தின் சில பகுதிகள் சிதைந்தன. ஆனால் புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவ, பெருங்குடலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அதிகாரிகளுடன் அவருக்குப் பலமுறை தகராறு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆர்ச்சர்ட் சாலையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.