சிங்கப்பூரின் வாழ்க்கைமுறை 2030ஆம் ஆண்டுவாக்கில் பசுமை மிகுந்ததாக இருக்கும். மக்கள் வேலை செய்யும் முறையிலும் படிப்பது, விளையாடுவது போன்றவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நீடித்து நிலைத்தலுக்குத் தேவையான நடவடிக்கைகள் அறிமுகமாவது பசுமை நிலையைச் சாத்தியமாக்கும்.
ஐந்து அமைச்சுகள் ஒன்றிணைந்து நேற்று வெளியிட்ட ‘சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030’ நீடித்த நிலைத்தன்மையை நோக்கி நடைபோடும் சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.
உள்கட்டமைப்பு தொடங்கி மேம்பாடு, ஆராய்ச்சி, புத்தாக்கம், பயிற்சித் திட்டங்கள் வரை சமூகத்தின் எல்லாத் துறைகள் வழியாகவும் இந்த விரிவான திட்டம் இயங்கும்.
நீடித்த நிலைத்தன்மை நிறைந்த எதிர்காலத்திற்கு உருமாற விரும்பும் சிங்கப்பூரை ஒருங்கிணைக்கும் எண்ணம் கொண்டது இத்திட்டம்.
கொவிட்-19 காரணமாக பொருளியல் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழ ‘நல்லமுறையில் பழைய நிலைக்குத் திரும்பும்’ உலகமயத்தன்மைக்கு ஏற்ப இதன் நோக்கம் அமையும்.
கல்வி, தேசிய வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்தன்மை, வர்த்தக தொழில், போக்குவரத்து ஆகிய ஐந்து அமைச்சுகள் இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ளன.
“சிங்கப்பூரின் பொருளியலை வலுப்படுத்துவதோடு பருவநிலை மற்றும் வளங்களுக்கான மீள்
திறனை அளித்து சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் சூழலை இந்த விரிவான திட்டம் மேம்படுத்தும். மேலும் புதிய வர்த்தகங்களையும் வேலை வாய்ப்புகளையும் இது கொண்டு வரும்,” என்று ஐந்து அமைச்சுகள் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
“நமது வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் இது பலன் அளிக்கும். எவ்வாறு வசிக்கிறோம் என்பதில் இருந்து எவ்வாறு வேலை செய்கிறோம், எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பது வரை எல்லாவற்றிலும் அந்தப் பலன் இருக்கும். பசுமை நிறைந்த, அதிகம் வாழத்தகுந்த இல்லமாக சிங்கப்பூரை உருவாக்க ஒரு தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட இத்திட்டம் ஒத்துழைக்கும்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
பசுமைத் திட்டத்தை ஐந்து அமைச்சுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் விவரிக்கும் 15 நிமிட காணொளி ஒன்றும் பகிரப்பட்டது. ஒவ்வோர் அமைச்சரும் திட்டத்தில் தங்களது அமைச்சின் பங்கு பற்றி விளக்கினர்.
ஐந்து முக்கியமான அம்சங்களைத் திட்டம் பெற்றிருக்கும். இயற்கை நகரம், நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த வாழ்க்கை முறை, எரிசக்தி புதுப்பிப்பு, பசுமைப் பொருளியல், மீள்திறன் மிகுந்த எதிர்காலம் ஆகியன அவை.
கட்டடங்களின் தரத்தை நீடித்த நிலைத்தன்மைக்கு உயர்த்தும் திட்டங்கள் இருப்பதால் பசுமைச் சூழல் கட்டடங்களில் வேலை செய்ய முடியும். சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடங்
களுக்கு சான்றிதழ் வழங்கும் தற்போதைய பசுமை முத்திரைத் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டு, எரிசக்தி ஆற்றலை உயர்த்தும் வகையிலான தொழில்நுட்பம் அதில் புகுத்தப்படும்.