வங்கியின் நிகர வட்டி அளவு வீழ்ச்சியடைந்ததாலும் கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் வாராக் கடன்கள் அதிகமாக இருக்கும் என்பதாலும் நான்காவது காலாண்டு வருவாயில் 33 விழுக்காடு சரிவு ஏற்பட்டதாக டிபிஎஸ் குழுமம் நேற்றுத் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த ஆண்டு நிலவரம் குறித்து டிபிஎஸ் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா நம்பிக்கையுடன் உள்ளார்.
இந்த ஆண்டு உறுதியான பொருளியல் மீட்சியை அண்மைய பொருளியல் தரவுகள் கோடிகாட்டுகின்றன என்றும் ஜனவரி மாத சிறப்பான வங்கியின் செயல்பாடு இந்த ஆண்டிற்கு நல்ல தொடக்கத்தை அளித்துள்ளது என்றும் கூறினார்.
டிபிஎஸ் காலாண்டு அறிக்கை வெளிவந்த பின் டிபிஎஸ் பங்குகள் நேற்றுக் காலை 9.37 மணிக்கு ஒன்பது காசுகள் அல்லது 0.35% உயர்ந்து $26.02 ஆக இருந்தது.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய கடன் வழங்கும் நிறுவனமான இந்த வங்கியின் நிகர லாபம் $1.01 பில்லியன். இது ஓராண்டுக்கு முன்னர் $1.5 பில்லியன் ஆக இருந்தது.
புளூம்பெர்க்கின் ஏழு ஆய்வாளர்கள் கணித்த சராசரி மதிப்பீடான $1.06 பில்லியனைவிட அதன் வருவாய் சற்றுக் குறைவாக இருந்தது.