தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி, மே 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆயினும், மாணவர்களுக்கு இடையிலான தொடர்பும் ஒன்றுகலப்பதும் குறைவாக இருக்கும் 12 விளையாட்டுகளில், 'ஏ', 'பி', 'சீனியர்' பிரிவு ஆகிய நிலைகளில் மட்டுமே போட்டிகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'சி' மற்றும் 'ஜூனியர்' பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் பருவத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்நிலை 3, 4, 5 மாணவர்கள் 'பி' பிரிவிலும் உயர்நிலை 1, 2 மாணவர்கள் 'சி' பிரிவிலும் பங்கேற்பர். 'ஏ' பிரிவு போட்டிகள் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கானது. 12-13 வயது தொடக்கப் பள்ளி மாணவர்கள் 'சீனியர்' பிரிவிலும் 9-11 வயதினர் 'ஜூனியர்' பிரிவிலும் போட்டியிடுவர்.
பூப்பந்து, உருட்டுப்பந்து, குழிப்பந்து, சீருடற்பயிற்சி, கயிறு தாண்டுதல், செப்பாக் தக்ராவ், துப்பாக்கி சுடுதல், மேசைப்பந்து, டேக்வாண்டோ, டென்னிஸ், தரப்பிற்கு மூவர் பங்கேற்கும் கைப்பந்து, வூஷு ஆகிய விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறும்.
நீச்சல், காற்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட மற்ற 17 விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
"மூன்றாம் கட்டத் தளர்வின்போதும் கொவிட்-19 பரவும், புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகும் அபாயம் நீடிக்கிறது. அதனால்தான் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றுகலப்பதைக் குறைக்க அமைச்சு முயன்று வருகிறது.
"அத்துடன், பெரிய அளவிலான கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாவதைத் தவிர்ப்பதற்காக எல்லாப் பள்ளிகளிலும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன," என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
அனுமதிக்கப்பட்ட 12 விளையாட்டுகளிலும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும். போட்டிகளின்போது அதிகபட்சம் எட்டு விளையாட்டாளர்கள் மட்டுமே ஒன்றுகலக்க முடியும்.
உருட்டுப்பந்து போன்ற விளையாட்டுகளின்போது, மாணவ விளையாட்டாளர்கள் தங்களுக்குள் குறைந்தது 2 மீட்டர் இடைவெளியைப் பேண வேண்டும்.
ஒரு நேரத்தில், ஒரு போட்டியரங்கில் அதிகபட்சம் 50 பங்கேற்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். எல்லாப் போட்டிகளும் மூடிய அரங்கிற்குள் நடத்தப்படும்.
வழக்கமாக, ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை இடம்பெறும் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளே சிங்கப்பூரின் ஆகப் பெரிய விளையாட்டு நிகழ்ச்சி. ஏறக்குறைய 60,000 மாணவர்கள் அப்போட்டிகளில் பங்கேற்பர்.