சுத்தமான, பசுமையான உள்ளூர் உற்பத்தியை உறுதி செய்வதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.
உள்ளூர் காய்கறி பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் புதிதானவை, செயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாதவை, நிலையாகக் கிடைக்கக்கூடியவை,
சுற்றுச்சூழல் பாராமரிப்பை விட்டுக்கொடுக்காமலே, வளங்களைத் திறம்பட பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுபவை என்பதை பயனீட்டாளர்களுக்கு உறுதியளிக்க, இந்த வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
"எஸ்எஸ் 661: சுத்தமான, பசுமையான நகர்ப்புறப் பண்ணைகளுக்கான விவரக்குறிப்பு - வேளாண்மை", என்ற இந்த வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளிட்ட தரநிலையை சிங்கப்பூர் உணவு முகவை (எஸ்எஃப்ஏ) என்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் உற்பத்தி சம்மேளனம், தர மேம்பாட்டு அமைப்பு, ரிபப்ளிக் பலதுறைதொழில் கல்லூரி ஆகியவை இணைந்து அறிவித்துள்ளன.
சுத்தமான, பசுமையான உற்பத்தி முறையை அடைவதற்கு பண்ணை மேலாண்மை, நுட்பங்கள், நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நகர்ப்புற காய்கறிப் பண்ணைகள் பெற்றிருக்க வேண்டிய தகுதிவிதிகள் இதில் உள்ளன.
சுத்தமான பண்ணை உற்பத்தி முறை என்பது செயற்கை பூச்சிக்கொல்லிகள் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களைப் பயன்படுத்தாதது. மேலும் பயனாளர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் விரும்பத்தகாத கழிவுகளை உற்பத்தி செய்யாதது.
பசுமைப் பண்ணை உற்பத்தி முறையானது, இயற்கை வளங்களையும் பண்ணை உற்பத்திப் பொருட்களையும் திறம்படப் பயன்படுத்துவதை உறுதிசெய்கிறது. சுற்றுச்சூழலிலும் சுற்றுச்சூழல் கட்டமைப்பிலும் தாக்கத்தை குறைக்க பண்ணைக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது, பண்ணை உற்பத்தியை அதிகபட்சம் அதிகரிப்பது ஆகியவற்றை உறுதி செய்கிறது.
பண்ணை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச தகுதித் தேவைகள், வளங்களை பொறுப்பாக நிர்வகிப்பதற்கான திட்டங்கள், பசுமைக் கொள்முதல் நடைமுறைகள், பண்ணை செயல்பாடுகள், அத்துடன் வாடிக்கையாளர் புகார்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், பண்ணைப் பொருட்களைத் திரும்பப் பெறுதல், உள் தணிக்கைகளை நடத்துதல் ஆகியவை இந்த அளவுகோல்களில் அடங்கும்.
வளங்கள் விரயமாவதைக் குறைப்பதற்கும், அவற்றின் வள நிர்வாகத்தில் சுற்றறிக்கையை இணைத்துக்கொள்வதற்கும், செயல்பாட்டுத் திறனை அதிகபட்சம் மேம்படுத்துவதற்கும் காய்கறி பண்ணைகள் அறிவார்ந்த விவசாய நுட்பங்களையும் நடைமுறைகளையும் பின்பற்ற உதவும்.
பருவநிலைமாற்றத்தினால் அதி கரித்து வரும் சவால்களைக் கருத்தில்கொண்டு, இந்த வழிகாட்டுதல்கள் தக்க நேரத்தில் வெளியிடப்பட்டு உள்ளன என்றார் சிங்கப்பூர் சிங்கப்பூர் உணவு முகவையின் உணவ நிர்வாக தலைமை இயக்குநரும் துணைத் தலைமை நிர்வாகியுமான டாக்டர் டான் லீ கிம்.
"பருவநிலை மாற்றம், சிங்கப்பூரின் உள்ளூர் உணவு உற்பத்தி உட்பட உணவு விநியோகத் தொடரில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில் வளங்களை திறம்பட பயன்படுத்தக்கூடிய விவசாய நடைமுறைகளை உள்ளூர் பண்ணைகள் செயல்படுத்துவதை உறுதி செய்வதில் தரநிலை முக்கியமானதாக இருக்கும். அத்துடன் நீண்ட காலத்திற்கு உற்பத்தி நிலையானதாக இருக்கவும் உதவும்," என்றார் டாக்டர் டான்.
"இதன் விளைவாக, உள்ளூர் நகர்ப்புற பண்ணைகள், வளங்களைப் பயன்படுத்துவதில் திறமையான நடைமுறைகளைப் பின்பற்றி, சுத்தமான, நிலையான சூழலில் பாதுகாப்பான, தரமான உணவு உற்பத்தி அங்கீகரிக்கப்படும். இது உள்ளூர் உற்பத்தியை வேறுபடுத்தி, தனி முத்திரையைப் பதிக்கும். மேலும் தரமான உற்பத்திக்கான சிங்கப்பூரின் நற்பெயரை மேலும் வலுப்படுத்துவதுடன், '30 இல் 30' இலக்கை அடைய செயல்படுவோம்," என்றார் டாக்டர் டால்.
"30 இல் 30" இலக்கு என்பது சிங்கப்பூர் அதன் ஊட்டச்சத்து தேவைகளில் 30 விழுக்காட்டை 2030க்குள் உள்நாட்டில் உற்பத்தி செய்வதாகும்.
சிங்கப்பூர் உணவு ஆணையம் உள்ளூர் விவசாயிகள், தொழில்துறை செயல்பாட்டாளர்களுடன் இணைந்து தரம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும்.
தரத்தை பின்பற்றுவதில் பண்ணைகளுக்கு உதவ ஏப்ரல் முதல் மூன்று நாள் பயிற்சி வகுப்பை ரிபப்ளிக் பலதுறைதொழில் கல்லூரி நடத்தும்.