கடும் மழையால் திடீர் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் திட்டம்
உலு பாண்டான் கால்வாய் அருகிலுள்ள பூங்கா இணைப்பின் தாழ்வான பகுதி ஒன்று, ஏப்ரல் 17ஆம் தேதியன்று திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களின் ஓர் அங்கமாக இப்பகுதியை உயர்த்தவுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
கடும் மழை பொழிந்ததில் வெள்ளம் ஏற்பட்ட சம்பவம், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதைத் தடுக்கும் திட்டம் குறித்து திரு கிரிஸ்தஃபர் டி சூசா (ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி) எழுப்பிய கேள்விகளுக்கு திருவாட்டி ஃபூ இவ்வாறு பதிலளித்தார். கிட்டத்தட்ட 300 மீட்டர் நீளமுடைய உலு பாண்டான் கால்வாய் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்ட போதும் அதே வட்டாரத்தில் கால்வாய் அருகில் அமைந்த பிரதான சாலைகள் ஏதும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார் அவர்.
அதே நாளில் புக்கிட் தீமா, டனர்ன் சாலைகளிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் 30 நிமிடங்களில் வெள்ள நீர் வடிந்துவிட்டது என்றும் போக்குவரத்து தடைபடவில்லை என்றும் திருவாட்டி ஃபூ கூறினார்.
புக்கிட் தீமா கால்வாய் தொடர்பில் செப்டம்பர் 2019ல் முடிவடைந்த சில மேம்பாடுகளால் அங்கு திடீர் வெள்ளச் சம்பவங்கள் நிகழவில்லை என்றார் அவர். இதையடுத்து, கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்ட கால்வாய் பகுதி, மேம்படுத்தப்படும் என்றும் இது 2024ல் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, கடும் மழை பெய்தாலும் இக்குறிப்பிட்ட கால்வாய் பகுதியில் ஏப்ரல் 17 அன்று பதிவானதைவிட நீர்மட்டம் ஒரு மீட்டருக்குக் குறைவாகத் தான் இருக்கும் என்றார் அவர்.