கொவிட்-19 தாக்கத்தில் இருந்து மீண்டு ஊழியர்களின் சம்பளத்தை பழைய நிலையை நோக்கி சீரமைக்க முயலும் அல்லது முன்னேற்றத்தை நோக்கி இயங்கும் நிறுவனங்களின் முதலாளிகள் அனைவரும் தற்போதைய வர்த்தகச் சூழலை மறுமதிப்பீடு செய்வதோடு ஊழியருக்கு நியாயமான வெகுமதி வழங்கவும் ஆள்நியமனத் திட்டங்களை முன்கூட்டியே செயல்படுத்தவும் தேசிய சம்பள மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும், இன்னும் செலவுச் சிக்கலில் மூழ்கி, வர்த்தக முன்னேற்றம் காணாத நிறுவனங்களின் முதலாளிகள், தங்களது ஊழியர்
களின் வேலையைத் தக்கவைக்கும் பொருட்டு, தற்காலிக சம்பள வெட்டு நடவடிக்கையை தொடர்ந்து அமல்படுத்தலாம் என்றும் மன்றம் தெரிவித்துள்ளது.
இவை தற்போதைய வழிகாட்டிக் குறிப்புகளில் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டிக் குறிப்புகள் தற்போதைய பொருளியல் நிலவரத்திற்குப் பொருந்தும் வகையில் தொடர்ந்து நடப்பில் இருக்கும் வகையில் நவம்பர் 30 வரை அவை நீட்டிக்கப்படுவதாக உயர்மட்ட மன்றம் தெரிவித்தது. இதற்கு முன்னர் அந்தக் காலக்கெடு ஜூன் 30 ஆக இருந்தது. உலகளாவிய பொருளியல் சூழல் பின்னடைவைச் சந்திக்கும் என்ற கருத்துகளுக்கு மாறாக சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 6 விழுக்காட்டையும் தாண்டி வளர்ச்சி அடையக்கூடும் என்ற நிலையில் மன்றத்தின் அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
முன்னுரைக்கப்பட்டுள்ள இந்த வளர்ச்சி, இதற்கு முன்னர் வர்த்தக தொழில் அமைச்சு கணித்திருந்த 4 விழுக்காட்டுக்கும் 6 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகம்.
அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய சம்பள மன்றம், பொருளியல் மீட்சி என்பது துறைகளுக்கு ஏற்ப மாறு
படுவதை ஒப்புக்கொண்டுள்ளது. சில நிறுவனங்கள் மற்றவற்றைக் காட்டிலும் விரைவாகவே மீண்டு வருவதை அது குறிப்பிட்டது.
உதாரணமாக, உற்பத்தி, மொத்த வர்த்தகம், நிதி மற்றும் காப்பீடு, தகவல் தொடர்பு போன்ற துறைகள் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படும் அதே நேரம் பயணத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை போன்றவற்றின் வளர்ச்சி மேலும் தாமதமடையக்கூடும் என்பது மன்றத்தின் கணிப்பு.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பல்வேறு முதலாளிகளின் சூழ்நிலைகள் கணிசமாக மாற்றம் கண்டிருப்பதாக மன்றத்தின் தலைவர் பீட்டர் சீ தெரிவித்தார். எனவே அவர்களின் வர்த்தகச் சூழலை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் எழுந்திருப்பதாக ஹேவ்லாக் ரோட்டில் உள்ள மனிதவள அமைச்சின் கட்டடத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தேசிய சம்பள மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் வழக்கமாக ஏப்ரல் அல்லது மே மாதம் நடை
பெறும். இருப்பினும் கொரோனா கிருமிப் பரவல் சூழலில் கடந்த ஆண்டு முன்கூட்டி மார்ச் மாதமே கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர பரிந்துரைகளில், நிறுவன முதலாளிகள் தொடக்கமாக சம்பளமற்ற செலவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துமாறும் அதற்கு அரசாங்க ஆதரவுத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் உதவிகளை உள்ளடக்கிய வழிகாட்டிக் குறிப்புகள் வெளியிடப்பட்டன.
ஆட்குறைப்பைக் குறைப்பதற்கான யோசனைகள் அதில் தெரிவிக்கப்பட்டன. மேலும் நீக்குப்போக்கான சம்பள முறையை அமல்படுத்த அந்தக் குறிப்புகள் ஊக்குவித்தன.
பின்னர் அந்தக் குறிப்புகள் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 1 முதல் இவ்வாண்டு ஜூன் 30 வரை அவை நடப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. வேலையைக் காப்பாற்றுவதற்காக ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க அந்த வழிகாட்டிக் குறிப்புகள் அனுமதித்தபோதிலும் அதற்கு ஊழியர்களின் ஆதரவை முதலாளிகள் பெற வேண்டும் என்றும் அவசியமான குறைப்புகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மீட்சி காணும் துறைகளுக்கு தேசிய சம்பள மன்றம் பரிந்துரை