எப்போதுமே முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்ற விதியைத் தன் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்த தவறிவிட்டதற்காக 25 உடற்பிடிப்பு நிலையங்களுக்கு எதிராக போலிஸ் நடவடிக்கை எடுக்கும்.
உடற்பிடிப்பு சேவையின்போது விதியை மீறியதற்காக 23 தனிப்பட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸ் தெரிவித்தது.
கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் முற்றிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த இத்தகைய நிறுவனங்களுக்கு எதிரான சோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் போலிஸ் தெரிவித்தது.
கடந்த இரண்டு வாரங்களில் இத்தகைய ஏறத்தாழ 850 நிறுவனங்களில் சோதனைகள் நடந்து உள்ளன. நிறுவனங்கள் எந்த அளவுக்கு விதிகளை மீறி இருக்கின்றன என்ற அடிப்படையில் அவற்றுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும்.
அவற்றுக்கு $1,000 முதல் $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். தனிப்பட்டவர்களுக்கு $1,000 அபராதம் விதிக்க முடியும்.
உடற்பிடிப்பு நிலையங்களை நடத்துவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிக தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பாதுகாப்பு இடைவெளியை மீறும் தனிப்பட்டவர்களுக்குச் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்க இடமுண்டு.