சிங்கப்பூரின் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இவ்வாண்டின் முதல் பாதியில் $5.3 பில்லியன் திரட்டியுள்ளன. கடந்த ஆண்டின் முதல் பாதியில் பதிவான $3.4 பில்லியனைக் காட்டிலும் இது அதிகம்.
கொவிட்-19 கொள்ளைநோயால் பல்வேறு சவால்கள் ஏற்பட்டபோதும் சிங்கப்பூரின் புதிய நிறுவனங்களுக்கான கட்டமைப்பு அதிக மீள்திறன் உடையதாக இருப்பதை இது காட்டுவதாக 'என்டர்பிரைஸ் சிங்கப்பூர்' (இஎஸ்ஜி) அமைப்பின் தலைவர் பீட்டர் ஓங் நேற்று கூறினார். நிதித் திரட்டு நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 355 என்றும் கடந்த ஆண்டு இது 317ஆக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். கொள்ளைநோய் சூழலில் தொழில்முனைவர் ஆவதில் சிங்கப்பூரர்கள் கூடுதல் ஆர்வம் காட்டுவதையும் அவர் சுட்டினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதல் இஎஸ்ஜியின்கீழ் 680க்கும் மேற்பட்டோர் தங்களின் தொழில்முனைப்புத் திட்டங்கள் மூலம் பயிற்சி பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது. இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பணியிடைக்கால பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் ஆவர்.
இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும் மேலும் அதிக தரமான புதிய நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கவும் இஎஸ்ஜியின் முதலீட்டுப் பிரிவு 'சீட்ஸ் கேப்பிட்டல்' அதன் இணை முதலீட்டுப் பங்காளிகளாக 13 புதிய தொழில்முனைப்பு நிறுவனங்களை நியமிக்கவுள்ளது.
இதன்மூலம் பங்காளிகளின் எண்ணிக்கை 46ஆக உயரும் என்று கூறப்பட்டது. நிறுவனங்கள் மூலம் பெறப்படும் முதலீடுகளின் மதிப்பு $150 மில்லியனுக்கு மேல் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி வழங்குவதுடன் இந்தப் பங்காளி நிறுவனங்கள் வழிகாட்டவும் புதிய நிறுவனங்களின் வணிகமய முயற்சிகளுக்குக் கைகொடுக்கவும் உள்ளன.
சிங்கப்பூருக்கு நான்காவது இடம்
புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் துரிதமாக வளர்ந்து $1 பில்லியனுக்கு மேல் மதிப்பு பெற்றுவிடுவதன் தொடர்பில் உலகிலேயே தலைசிறந்த பொருளியல் சூழல் கொண்டதற்காக சிங்கப்பூர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டிஷ் விலை ஒப்பீட்டு இணையத்தளம் ஒன்று வெளியிட்ட இப்பட்டியலில் இது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரின் ஆறு புதிய நிறுவனங்கள், சராசரியாக ஆறு ஆண்டுகள் 11 மாதங்களில் $1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.35 பி.) மதிப்பைத் தாண்டியதாகக் கூறப்பட்டது.
பட்டியலின் முதலிடத்தை சீனா பிடித்திருந்தது. அதன் 155 புதிய நிறுவனங்கள் சராசரியாக ஐந்தாண்டுகள் பத்து மாதங்களில் அதே ஒரு பில்லியன் குறியீட்டைத் தாண்டியதாகக் கூறப்பட்டது.
இரண்டாம் இடத்தில் ஹாங்காங் என்றும் மூன்றாம் இடத்தில் ஜப்பான் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூருடன் நான்காம் இடத்தைப் பிடித்திருந்தன 378 புதிய நிறுவனங்களுடைய அமெரிக்கா மற்றும் ஆறு நிறுவனங்களுடைய ஆஸ்திரேலியா.
இதற்கிடையே $1 பில்லியன் மதிப்பைத் தாண்டிய ஆக அதிகமான புதிய நிறுவனங்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 155 நிறுவனங்களுடன் சீனாவும் அடுத்து 34 நிறுவனங்களுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே இத்தகைய மதிப்புடைய புதிய நிறுவனங்கள் அரிதானவை என்றும் 750 மட்டுமே உள்ளன என்றும் பட்டியலை வெளியிட்ட தளம் குறிப்பிட்டது.