ஊழியர் பற்றாக்குறையால் கடைகள் மூடிக் கிடக்கின்றன
கி.ஜனார்த்தனன்
கிருமிப்பரவல் சூழலில் இரண்டாவது முறையாக லிட்டில் இந்தியா வட்டாரம் தீபாவளிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஆயினும் மனிதவளப் பிரச்சினைகளால் நெருக்குதலுக்கு உள்ளாகிய சில கடைகள் அவ்வப்போது மூட வேண்டியுள்ளது. பெரும்பாலான கடைகள் தொடர்ந்து இயங்கிவந்தாலும் சில சிறிய கடைகள் மூடப்பட்டிருப்பதைத் தமிழ் முரசு கண்டறிந்தது.
சில நாட்கள் மூடியிருந்த கோமள விலாஸ் சுமார் ஒரு வாரத் திற்கு முன்பு மீண்டும் திறக்கப் பட்டது. அதேபோல, ஆனந்த பவன், காயத்ரிஸ் ஆகிய உணவகங்களும் சில நாட்கள் மூடப்பட்டு வருகின்றன.
ஊழியர் பற்றாக்குறையால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு அதிகம் பாதிப்பு அடைந்திருப்பதாக ஆனந்த பவன் உரிமையாளர் வீரன் குமார் கூறினார்.
"கடந்தாண்டு கிருமிப்பரவல் முறியடிப்புக் காலகட்டத்தில் நமக்கு ஏற்பட்ட கவலை, இப்போது பன் மடங்கு அதிகரித்துள்ளது.
"இயந்திர தொழில்நுட்பம், திறன்பேசி மூலமான முன்பதிவுகள் போன்ற தொழில்நுட்ப மேம்பாடு களில் கவனம் செலுத்தி வந்தாலும் தற்போதைய நிலையில் ஊழியர் தட்டுப் பாடு பெரிதும் பாதிக்கிறது," என்று அவர் கூறினார்.
ஊழியர் பற்றாக்குறையாலும் குறைந்த வர்த்தகத்தாலும் பனானா லீஃப் அப்போேலாவின் லிட்டில் இந்தியா ஆர்க்கேட் கிளை செப் டம்பர் 27ஆம் தேதி மூடப்பட்டதாக உரிமையாளர் திரு சங்கரநாதன் தெரிவித்தார்.
அண்மையில் இந்தியர்களை இங்கு வரவழைத்து வேலை வாய்ப்பு தரும் அரசாங்க ஏற்பாடு அறிமுகம் கண்டுள்ளதால் தற்போது தளர்ந்து போயிருக்கும் கடை உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருப் பதாக அவர் கூறினார்.
வர்த்தக பாதிப்பாலும் ஊழியர் பற்றாக்குறையாலும் வர்த்தக செயல் பாடுகளைச் சுருக்க வேண்டி யிருப்பதாக பிரசன்னாஸ் உணவக நிர்வாகி முருகப்பா பாண்டியன் தெரிவித்தார்.
"வாம்போவிலுள்ள எனது கிளை ஒன்றை இதனால் நான் மூட வேண்டியுள்ளது," என்றார் திரு முருகப்பா.
"கடந்தாண்டு புதிய இந்திய ஊழியர்களை எங்களால் வர வழைக்க முடியவில்லை. இங்குள்ள மலேசிய ஊழியர்கள் சிலரை வேலையில் அமர்த்தி சமாளித்தோம். அவர்களும் இப்போது தாயகத்திற்குத் திரும்ப தொடங்கிவிட்டனர்," என்று அவர் கூறினார்.
ஸ்ரீ ஆச்சி ஆப்பக் கடை, ஆதிரை உணவகம், செந்தூரா, ராஜ் ஒயின்ஸ் உள்ளிட்ட சில கடைகள் மாலை நேரத்தில் மூடியிருந்ததை தமிழ் முரசு கண்டறிந்தது.
தமக்குப் பிடித்த கடைகளில் ராஜ் ஒயின்ஸ் ஒன்றாக இருப்பதாகக் கூறிய சிங்கப்பூரர் தீபா சுரேந்திரன், 33, அங்கு வெளிநாட்டு ஊழியர்கள்தான் அடிக்கடி வருவதாகத் தெரிவித்தார்.
"தமிழக பாணியில் மதுபானத்துடன் 'சிக்கன் 65' உண்பது எனக்கு மிகவும் பிடிக்கும். போதிய வாடிக்கையாளர்கள் இல்லாததால் கடை மூடப்பட்டதைக் கேள்விப் படும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது," என்று வங்கியில் பணியாற்றும் அவர் கூறினார்.
தமிழ் முரசிடம் பேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் குர்சரன் சிங், "10 முதல் 15 உணவகங்கள் கடந்த ஈராண்டுகளில் மூடப்பட்டுள்ளன. எவ்வளவோ தாக்குப்பிடிக்க முயற்சி செய்தாலும் அவற்றால் முடியவில்லை," என்றார்.
"இதுவரை சரவண பவன் அடைக்கப்பட்டுள்ளது. ரிவர்வாக் தண்டூரின் கிளைகளும் மூடப்பட்டன. ஜக்கீசின் ஒரு கிளையும் மூடப்பட்டது. இன்னும் பல சிறிய உணவகங்களும் மூடியுள்ளன," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வர்த்தக மந்தத்தைக் காட்டிலும் ஊழியர் பற்றாக்குறை வர்த்தகத்தை அதிகமாக பாதித்திருப்பதாக திரு சிங் சொன்னார்.
கோமளாஸ் உணவக உரிமை யாளரான திரு தனசேகரன், ஒரு கடையை மட்டும் வைத்துள்ள உணவகங்களைக் காட்டிலும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ள உணவகங்களே அதிக சிரமத்தை எதிர்நோக்குகின்றன என்றார்.
"மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக எங்களுக்கு
10 கிளைகள் இருந்தன. இப்போது ஐந்து கிளைகள் மட்டுமே உள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் இந்திய உணவக ஊழியர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் மகேந்திரன், "எஸ்-பாஸ் பிரிவின் வழியாக மட்டுமே இந்தியர்களை அழைத்துவர முடியும். ஆனால் 'ெவார்க் பர்மிட்' மூலமாக இந்தியர்களை உணவகங்களுக்கு வரவழைக்க முடியாது. சீன உணவகங்களில் தைவான், ஹாங்காங், மக்காவ் போன்ற நாடுகளிலிருந்து உணவக ஊழியர்கள் 'வொர்க் பர்மிட்' மூலமாக அழைத்துவர முடிகிறது," என்று கூறி உள்ளார்.