ஆசிரியர்களின் பணிச்சுமையையும் மனச்சுமையையும் குறைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களை கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பணிக்குத் தயாராக உள்ள ஆசிரியர்கள், அவர்களுக்கான வேலை நேரம் போன்றவை தொடர்பில் தெளிவான தகவல்களை உருவாக்குவதன் மூலம் பணிச்சுமையை அவர்கள் குறைக்கலாம் என்றது அது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து கல்வி அமைச்சர் சான் சுன் சிங் உரையாற்றினார்.
“பள்ளி நேரத்திற்குப் பின்னர், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சம்பந்தப்பட்ட அவசரம் தவிர இதர நேரங்களில் பெற்றோர்-பள்ளி அலுவலர்கள் தொடர்புகளைத் தவிர்ப்பது பற்றி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டிக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
“வேலை நேரம், சொந்த நேரம் ஆகியவற்றுக்கு இடையிலான தெளிவின்மையைக் குறைக்க இது உதவும்,” என்றார் அவர்.
ஒவ்வோர் ஆண்டும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் அல்லது மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் ஆசியர்களின் எண்ணிக்கை பற்றி பைனியர் தொகுதி உறுப்பினர் பேட்ரிக் டே கேள்வி எழுப்பினார். ஆசிரியர்களின் உளவியல் பிரச்சினைகளைக் குறைக்க எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் வினவினார்.
அதேபோல, ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதா என்று வினவிய ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால், ஆசிரியர்களின் மனநலத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் கேட்டிருந்தார்.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் தொடங்கியதில் இருந்து புதிய அழுத்தங்கள் காரணமாக ஆசிரியர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து உறுப்பினர்கள் இதுபோன்ற கேள்விகளை மன்றத்தில் எழுப்பினர்.
மாணவர்கள் பாதுகாப்புடன் கல்வி கற்பதை உறுதி செய் வதில் ஆசிரியர்களின் பொறுப்புகள் அதிகரித்திருப்பதாக திரு சான் ஒப்புக்கொண்டார். நேரடி வகுப்புகள், இணைய வகுப்புகள் என்று வெவ்வேறு சூழ்நிலைகளில் பணியாற்றுவதோடு பள்ளியில் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் வேலையும் ஆசிரியர்களுடையதாகிவிட்டதாக அமைச்சர் சொன்னார்.
எனவே ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க அதிக
நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளுமாறும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறும் பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். சுகாதார அமைச்சின் நடைமுறைகள் கணிசமாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தொடர்புத் தடயம் அறிவது தொடர்பான பணிச்சுமை தற்போது குறைந்திருப்பதாகவும் திரு சான் தெரிவித்தார்.
கொள்ளைநோய் பரவலுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் சரா
சரியாக 50 பள்ளி அலுவலர்கள் கல்வி அமைச்சின் மனநல ஆலோசகர்களின் உதவியை நாடி வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் அந்த எண்ணிக்கை 80க்கு உயர்ந்திருப்பதாக அவர் கூறினார்.