சிங்கப்பூரில் விரைவில் மேலும் கட்டுப்பாடுகள் அகலும் சூழ்நிலை ஏற்படும் என்று வல்லுநர்கள் கருத்து கூறி இருக்கிறார்கள்.
இப்போதைய சூழ்நிலையையும் கடந்த மூன்று வார நிலவரங்களையும் கருத்தில்கொண்டு பார்க்கையில் கட்டுப்பாடுகள் அகலுவதற்கான வாய்ப்புகள் விரைவில் ஏற்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஓமிக்ரான் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும் என்றாலும் சில ஊக்கமூட்டும் அறிகுறிகள் தெரிவதாக அவர்கள் கூறினர்.
மேலும் பலருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் வரை அல்லது சிறார்களுக்குத் தடுப்பூசி போடும்வரை அதிகாரிகள் காத்திருந்தாலொழிய கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து வைத்திருக்க வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் ஆய்வுத் துறை துணைத் தலைவர் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் கூறுகிறார்.
சிங்கப்பூர் விரைவில் மேலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடிய ஒரு நிலையை நோக்கிச் செல்கிறது என்பது பெரும்பாலும் நிச்சயம் என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மூத்த ஆலோசகர் பேராசிரியர் பால் தம்பையா தெரிவித்தார்.
இருந்தாலும் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு எடுக்கப்படும் முடிவு என்பது கொள்கை சார்ந்ததாக இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு கடைசியாக நவம்பர் 22ஆம் தேதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. ஐவர் வரை ஒன்று கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பு நவம்பர் 20ஆம் தேதி வெளியானது. அப்போது பேசிய பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், டிசம்பரில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்வதற்கான வாய்ப்புகள் இருக்காது என்று கூறினார்.
எல்லாம் நல்லபடியாக நடந்தால் டிசம்பர் முடிவில் அது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். கட்டுப்பாடுகள் மீது ஓமிக்ரான் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்பது பற்றி கருத்து கூறிய இந்த இரண்டு வல்லுநர்களும், அதனுடைய முழு தாக்கத்தையும் தெரிந்துகொள்ள மேலும் காலம் தேவை என்று கூறினர்.