ஒன்பது பிள்ளைகளின் தாயான 42 வயது திருவாட்டி ஹோ, அவரது இரண்டாவது கணவரின் நாலாயிரம் வெள்ளி மாதச் சம்பளத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கினார்.
இந்நிலையில், 'காம்லிங்க்' எனப்படும் சமூக உதவித் திட்டம் தனது குடும்பத்துக்கு மிகவும் உதவியாக இருந்ததாக அவர் கூறினார்.
காம்லிங்க் எனப்படும் பல்வேறு அமைப்புகள் பங்குபெறும் ஒருங்கிணைந்த முன்னோடித் திட்டம், சிங்கப்பூரின் வசதி குறைந்த குடும்பங்களைக் கைதூக்கிவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தொடங்கிய இந்தத் திட்டம், குறைந்த வருமானக் குடும்பங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவுகிறது.
அவர்களின் நிதிச் சுமை, குடும்பப் பிரச்சினைகள், சுகாதாரச் சிக்கல்கள், பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் அது கவனம் செலுத்தும்.
பிரச்சினைகளுக்கு விரிவான உதவியை ஒருங்கிணைந்த முறையில் வழங்கவும் வகைசெய்யும்.
சிங்கப்பூரில் சமூகசேவை வழங்கப்படும் விதத்தில் ஆழமான மாற்றத்தை விதைத்துள்ளது காம்லிங்க் திட்டம் என்று சமூகசேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ சென்ற வாரம் கூறியிருந்தார்.
குடும்பங்கள் உதவிகேட்டு வரும்வரை காத்திருக்காமல் இந்தத் திட்டம் நாடிச் சென்று உதவி வழங்குவதை அவர் சுட்டினார்.
குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தனித்தனியாக அணுகாமல் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் அடிப்படையில் தீர்வுகாணப்படுவது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம்.
இதுவரை 3,800 குடும்பங்கள் காம்லிங்க் மூலம் பலனடைந்துள்ளன. நாடளாவிய இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் 14,000க்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.