இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் அங்கீகரித்துள்ளார். மேலும், கொவிட்-19 நிலைமையைக் கையாள சிங்கப்பூரின் இருப்புநிதியிலிருந்து ஆறு பில்லியன் வெள்ளியைப் பயன்படுத்தவும் அவர் ஒப்புதல் வழங்கினார்.
"புதிய இயல்புநிலையை நோக்கி நாம் சென்றுகொண்டிருந்தாலும் பரிசோதனைகளை மேற்கொள்வது, மருத்துவ விவகாரங்களைக் கவனித்துக்கொள்வது, தடுப்பூசி போடுவது, சிகிச்சைகள் போன்ற அம்சங்களைக் கைவிடுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை," என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.
கொள்ளைநோய்ப் பரவலைக் கையாள தொடர்ந்து மூன்றாவது நிதியாண்டாக சிங்கப்பூர் இருப்புநிதியைப் பயன்படுத்துகிறது. வரவுசெலவுத் திட்டத்தைத் தாம் அங்கீகரிப்பதைத் தெரிவிக்கும் ஃபேஸ்புக் பதிவில் அதிபர் ஹலிமா இதைத் தெரிவித்தார்.
"சிங்கப்பூரர்களைப் பாதுகாக்கவும் நமது பொருளியலை மேம்படுத்தவும் இருப்புநிதியிலிருந்து இவ்வாறு பணம் எடுப்பது தவிர்க்கமுடியாதது," என்று அவர் சொன்னார்.
இம்மாதம் 11ஆம் தேதியன்று வரும் நிதியாண்டுக்கான 109 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
அதற்கு முன் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பொருள், சேவை வரி உயர்வு, வெளிநாட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவற்றின் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒன்பது நாள்களுக்கு விவாதங்கள் நடைபெற்றன.