கர்ப்ப காலத்தில் சிக்கல் ஏற்படும்போது மாதர் வழக்கமாக உதவி நாடுவர். இது தொடர்பில் புதிய அணுகுமுறை ஒன்றை கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனை ஆராய உள்ளது. இதன்படி, பெண்கள் கருத்தரிக்கும் முன்னரே சரியான வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுக்கவும் தங்களின் மனநலனை மேம்படுத்தவும் உதவ, பராமரிப்புக் கட்டமைப்பு ஒன்று ஆராயப்படும்.
இதனால், ஆரோக்கியமான குழந்தைகளை அவர்கள் பெற்றெடுப்பதையும் உறுதிப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மக்களிடையே நாள்பட்ட நோய்கள் பரவுவதை முற்றிலும் களைந்தெறிவதே இறுதி இலக்கு. சிறார், மகளிர் சுகாதாரம் மற்றும் நலன் தொடர்பான பணிக்குழு, கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
"கருத்தரிப்பதற்கு முன்னர் ஆரம்பக்கட்டத்திலேயே சரியான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பதால், கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அத்துடன் கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் குறைக்க முடியும்," என்று மருத்துவமனையின் குழந்தை மருத்துவப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஃபேபியன் யாப் கூறினார். இதற்கிடையே, உடல் பருமனாக உள்ள 500 பெண்களை ஆய்வுக்காக அடுத்த 12 முதல் 18 மாதங்களில் பதிய வைப்பதை மருத்துவமனை தன் இலக்காகக் கொண்டுள்ளது.