டாக்சி ஓட்டுநர் ஒருவரை
பிரிட்டிஷ் நாட்டவரான 60 வயது பால் ஜான் மர்ஃபி காயப்படுத்தியதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று மதுபானம் அருந்திவிட்டு டாக்சியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியான மர்ஃபி.
போக்குவரத்து விளக்கு சிவப்பாக மாறியதால் டாக்சியை ஓட்டுநர் நிறுத்தினார். வீட்டை இன்னமும் அடையாதபோதிலும் டாக்சியின் கதவைத் திறந்தார் மர்ஃபி. டாக்சிக்கு பின்புறத்திலிருந்து வந்துகொண்டிருந்த வாகனத்தின் ஓட்டுநர் விழிப்புடன் இருந்ததால் எதிர்பாராத விதமாக திறக்கப்பட்ட டாக்சி கதவு மீது மோதுவதை அவரால் தவிர்க்க முடிந்தது.
டாக்சியின் கதவை மூடும்படி சிங்கப்பூர் நிரந்தரவாசியான
மர்ஃபியிடம் டாக்சி ஓட்டுநர் எல்ஜின் லீ கத்தி தொடர்ந்து வசைபாடினார். லீ சொன்னதைக் கேட்டு டாக்சியின் கதவை மர்ஃபி மூடினார். ஆனால் பிறகு லீ வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது மர்ஃபி அவரைத் தாக்கினார்.
லீயின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. டாக்சியை நிறுத்தி மர்ஃபியை அவர் இறங்கச் சொன்னார். அவரிடமிருந்து அவர் டாக்சி கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.
தாங்க முடியாத வலியால் தாம் அவதியுற்றதாக லீ தெரிவித்தார். லீயை அவரது நண்பர்கள் இருவர் மவுண்ட்
அல்வெர்னியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. லீக்கு 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.
மர்ஃபி வேண்டுமென்றே காயம் விளைவித்தார் என்று தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி ஓங் சின் ரு தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, கவனக்
குறைவுடன் அவர் நடந்துகொண்டபோது மற்றவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.
டாக்சி கதவை மூடியதும் லீயிடம் தாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக மர்ஃபி தெரிவித்தார். ஆனால் லீ தொடர்ந்து தம்மைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக அவர் கூறினார்.
வழக்கறிஞர்கள் பிரதாப் கிஷனும் நிர்மல் சிங்கும் மர்ஃபியைப் பிரதிநிதிக்கின்றனர்.